நடிகை பலாத்கார வழக்கு காவ்யா மாதவன் இன்று ஆஜராக வேண்டும்: குற்றப்பிரிவு போலீஸ் மீண்டும் நோட்டீஸ்

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் நடிகர் திலீப், அவரது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவன் ஆகியோருக்கு எதிராக பல முக்கிய ஆவணங்கள் போலீசுக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்த போலீசார் தீர்மானித்தனர். ஆலுவாவில் இருக்கும் போலீஸ் கிளப்பில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறி, அவருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், தற்போது தான் சென்னையில் தங்கியிருப்பதால், 11ம் தேதி (நேற்று முன்தினம்) விசாரணைக்கு ஆஜராவதாக முதலில் அவர் சொல்லியிருந்தார்.இதையடுத்து ஆலுவா போலீஸ் கிளப்பில் காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்துவதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர். இந்நிலையில், தன்னால் 11ம் தேதி விசாரணைக்கு ஆஜராக முடியாது என்றும், 13ம் தேதி ஆலுவாவில் இருக்கும் தனது வீட்டில் வைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் சொல்லி போலீசுக்கு தகவல் அனுப்பினார். இதுதொடர்பாக சட்ட நிபுணர்களுடன் போலீசார் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், காவ்யா மாதவனுக்கு குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் மீண்டும் ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில், வீட்டுக்கு வந்து விசாரணை நடத்த முடியாது என்றும், இன்று ஆலுவா போலீஸ் கிளப்பில் கண்டிப்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.