
மாளவிகா மோகனனை தேடி வந்த அழையா விருந்தாளி
பேட்ட படம் மூலம் தமிழுக்கு வந்தவர் மலையாள நடிகை மாளவிகா மோகனன். தொடர்ந்து விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த மாளவிகா மோகனன் குறுகிய காலத்திலேயே முன்னணி வரிசை கதாநாயகியாக மாறினார். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் மாளவிகா அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அதிர வைக்கவும் தவறுவது இல்லை. ஆனால் தற்போது கன்னத்தில் முகப்பருவுடன் காட்சியளிக்கும் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார் மாளவிகா
அவர் கூறுகையில், “நடிகைகள் என்றால் எப்பொழுதுமே பளபளப்பான தோலுடன் தான் இருப்பார்கள் என பலரும் நினைப்பார்கள். ஆனால் நேற்று எனக்கு முக்கியமான படப்பிடிப்பு இருந்த நிலையிலும் கூட கடந்த இரண்டு நாட்களாக கன்னத்தில் தோன்றிய இந்த முகப்பரு என்னை பழி தீர்த்து வருகிறது. எவ்வளவு அழகான சருமம் என நாங்கள் நடிக்கும் விளம்பரத்தை பார்த்து ஆச்சரியப்படும் மக்களுக்கு, எங்களுக்கும் இதுபோன்ற உடல்நல குறைபாடுகள் வரும் என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும். இருந்தாலும் இதுபோன்ற முகப்பருக்களோ அல்லது வேறு எதுவோ வந்தாலும் கூட அவற்றை விரைவில் திரும்பி சென்று விடும் ஒரு அழையா விருந்தாளியாக நினைத்துக் கொண்டு கடந்து செல்ல வேண்டும்” என்றார்.