உக்ரைன் விவகாரம்: ஐநா பொது செயலாளருடன், மத்திய மந்திரி ஆலோசனை

நியூயார்க்:
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோர் அமெரிக்காவில் அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அந்நாட்டு பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்களை அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் உடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
நியூயார்கில் உள்ள ஐ.நா.பொதுச் சபை தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. 
இது குறித்து தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள ஜெய்சங்கர்,  ஐ.நா. பொதுச்செயலாளருடன் உக்ரைன் விவகாரம் குறித்து பரந்த விவாதம் நடத்தியதாக கூறியுள்ளார். 
ரஷியா-உக்ரைன் போர் காரணமாக சர்வதேச அளவில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்தும், இதனால் வளரும் நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்தும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். 
ஆப்கானிஸ்தான் மற்றும் மியானமர் நாடுகளின் தற்போதைய சூழல்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக்கால சவால்களை சர்வதேச சமூகம் எதிர்கொள்ள இந்தியா இணைந்து பணியாற்றுவதில் காட்டும் ஆர்வம் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் பாராட்டு தெரிவித்ததாகவும் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.