காண்ட்ரக்டர் தற்கொலை வழக்கு: பதவியை ராஜினாமா செய்யும் பாஜக அமைச்சர்?

கர்நாடகத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவரான கே.எஸ். ஈஸ்வரப்பா, எஸ்.ஆர். பொம்மை தலைமையிலான அரசில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருக்கிறார். அடிக்கடி சர்ச்சையாக பேசி சலசலப்பை ஏற்படுத்துபவரான
ஈஸ்வரப்பா
தற்போது பெரிய சிக்கலில் மாட்டியுள்ளார்.

காண்ட்ராக்டரான சந்தோஷ் பாட்டீலை தற்கொலைக்குத் தூண்டியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெலகாவியைச் சேர்ந்த காண்டிராக்டர் சந்தோஷ் பாட்டீல் என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கு முன்பு அவர் எழுதி வைத்த கடிதத்தில், ‘எனது சாவுக்கு முழுக்க முழுக்க காரணம் அமைச்சர் ஈஸ்வரப்பாதான். அவரால்தான் நான் சாகும் முடிவை எடுத்தேன். எனது மனைவி, குழந்தைகளை, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் எஸ்ஆர் பொம்மை, லிங்காயத்து தலைவர் எடியூரப்பா ஆகியோர்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று எழுதி வைத்திருந்தார்.

இந்த தற்கொலை விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தோஷ் பாட்டீல் மரண வழக்கை பாரபட்சமில்லாமல் நடத்துமாறு முதல்வர் எஸ்.ஆர். பொம்மை உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ஈஸ்வரப்பா மற்றும் அவரது 2 உதவியாளர்கள் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஈஸ்வரப்பா தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை மாநில ஆளுநரை சந்தித்து அவர் தமது ராஜினாமா கடிதத்தை தர உள்ளதாகவும் தெரிகிறது.

4 கோடி ரூபாய் மதிப்பிலான ஊரக வளர்ச்சிப் பணியை காண்டிராக்ட் எடுத்துள்ளார் சந்தோஷ் பாட்டீல். ஆனால் அதில் 40 சதவீத தொகையை தனக்கு கமிஷனாக வழங்க வேண்டும் என்று ஈஸ்வரப்பா நிர்ப்பந்தம் செய்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில்தான் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. ஆனால், சந்தோஷ் பாட்டீல் தமக்கு யார் என்றே தெரியாது என்று ஈஸ்வரப்பா கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.