அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக இருக்காது என பேச்சு- இம்ரான்கானுக்கு பாகிஸ்தான் ராணுவம் கண்டனம்

இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான அரசு எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்ததால் கவிழ்ந்தது.
இதையடுத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவர் ‌ஷபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டார். வெளிநாட்டு சக்தி (அமெரிக்கா) சதி செய்து தனது அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டதாகவும், இதற்கு எதிர்க்கட்சிகளும் உடந்தையாக செயல்பட்ட தாகவும் இம்ரான்கான் குற்றம்சாட்டினார்.
இதற்கிடையே பெஷாவர் நகரில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் இம்ரான்கான் பேசினார். அப்போது புதிய ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் பேசும்போது, ‘வெளிநாட்டு சதியின் ஒரு பகுதியாக ஆட்சிக்கு கொண்டுவரப்பட்டவர்கள் நாட்டின் அணு சக்தி திட்டத்தை பார்க்க முடியுமா? என்று கேட்க விரும்புகிறேன்.
‌ஷபாஸ் ஷெரீப் ஆட்சியில் அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக இருக்காது. வெளியில் பணத்தை வைத்து இருக்கும் இந்த கொள்ளையர்களின் கையில் அணுசக்தி திட்டம் இருப்பது பாதுகாப்பானதா?’ என்று கூறினார்.
இதற்கிடையே இம்ரான்கான் குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவத்தின் மேஜர் ஜெனரல் பாபர் இப்திகார் கூறியதாவது:-
பாகிஸ்தானின் அணுசக்தி சொத்துக்கள் தனிப்பட்டவர்களுக்கு சொந்தமல்ல. எங்கள் அணுசக்தி திட்டத்துக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. அதை அரசியல் விவாதங்களில் கொண்டு வரக்கூடாது. எங்கள் கட்டளை மற்றும் கட்டுப்பாடு வழிமுறை, சொத்து பாதுகாப்பு சர்வதேச மதிப்பீட்டில் சிறந்த ஒன்றாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.