பிரசவத்துக்கு பிறகும் வயிறு பெருத்து காணப்படுகிறதா? – விளக்கும் இயன்முறை மருத்துவர்

‘உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு’ என்று அவ்வை பிராட்டியின் கொன்றை வேந்தனில் குறிப்பிட்டுள்ள பெண்டிர் என்பது பெண்களை மட்டும் குறிப்பிட்டு உள்ளதா இல்லை ‘ பண்டி ‘ என்பது மருவி பெண்டிர் என ஆனதா என்று பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

(உண்டி‌-உணவு; பண்டி -வயிறு)

‘சிற்றிடை , கொடியிடை ,இஞ்சி இடுப்பழகி, வஞ்சிக்கொடி என பெண்களின் இடையை பற்றி அக்கறை கொள்ளும் கவிப் பெருந்தகைகளை போல பெண்களாகிய நாம் என்றேனும் அக்கறை கொண்டுள்ளோமோ? இடை மெலிந்து வடிவம் பெறுதல் மட்டுமே ஆரோக்கியத்தை தந்து விடுமா?

அதைப் பற்றி தெளிவுற அறிந்து கொண்டாலே, நமது பெரும்பாலான பிரச்சினைகளின் தீர்வினை கண்டறிந்து விடலாம்.

Representational Image

உடலின் மேற்பகுதியையும் கீழ் பகுதியையும் இணைக்கும் தசைகளாலான பகுதி வயிறு…

வயிற்றில் உள்ள தசைகள் உடல் உள்உறுப்புகளை பாதுகாப்பதோடு அல்லாமல் , முதுகு தண்டுவட தசைகளோடு இணைந்து உடலுக்கு நிலைத்த சமநிலையை உண்டு பண்ணுகிறது.

இத்தசைகளில் முக்கியமாக மேலாக உள்ள ஒரு தசை தான் “டயஸ்டேசிஸ் ரெக்டை” (diastasis recti) அல்லது சிக்ஸ் பேக் மஸில் (தசைகள்). இன்றைய ஃபிட்னஸ் , யோகா மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படுத்தும் பிரபலமான சொல்லாக மாறியுள்ளது. முக்கியமாக பிரசவித்த தாய்மார்களிடைய புழக்கத்தில் உள்ள சொல்லாகவும் உள்ளது.

முக்கியமாக பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் குழந்தை வளர்ச்சி அடைவதற்கேற்ப கர்ப்பப்பை விரிவடையும்‌, அதற்கேற்றாற்போல் இவ்வயிற்று தசைகளும் நெகிழ்ந்து கொடுக்கும், மேலும் இத்தசையானது தொப்புளின் மேற்பகுதியிலும் கீழ்பகுதியிலும் செங்குத்தாக ஒரு இடைவெளியை ஏற்படுத்தும் . இவ்வாறு ஏற்படும் தசை பிரிதலைத்தான் “டயஸ்டேசிஸ் ரெக்டை (வயிற்று முன் தசை பிரிதல்)” என்பர்.

Diastasis-separation ; recti-Rectus abdominis muscle

பொதுவாக பிரசவகாலத்திற்குப் பின் பெரும்பாலானவர்களுக்கு முதல் 8 வாரங்களுக்குள் தாமாகவே சரியாகி விடும். ஆனால் ஒரு சிலருக்கு பிரசவம்‌ முடிந்து 8 வாரங்களுக்கு பின்பும் கர்ப்பம் தரித்ததைப் போன்றே வயிறு காணப்படும்.

Representational Image

இது போல் வயிறு பெருத்து காணப்படும் பெண்களுக்கு ” வயிற்று தசை பிரிதல்” பிரச்சினை இருக்கும்.

இந்த தசைப் பிரிதல்/இடைவெளி இரண்டு சென்டி மீட்டர் அல்லது இரண்டு விரலிடைக்கும் மேல் இருந்தால் கண்டிப்பாக சிகிச்சை தேவைப்படும். இதனால் நேரடியாக அந்த தசையில் வலியோ வேறு ஏதாவது விளைவுகளோ ஏற்படாது ஆனால் அதைச் சுற்றியுள்ள மற்ற பகுதிகளில் சிற்சில அறிகுறிகளோடு சிறிய பாதிப்பை உண்டாக்கும்….

1.தொப்புளின் மேலோ அல்லது கீழோ வயிறு வீங்கியதைப் போன்றோ அல்லது தொட்டும் பார்த்தால் ஜெல்லி போன்று தோன்றும்.

2.இடுப்பு வலி

3.முதுகு வலி

4.சிறுநீர் கசிதல்

5 .மலச்சிக்கல்

6.கனமான பொருட்கள் தூக்குவதில் சிரமம்

7.அன்றாட வேலையோ நடைபயிற்சி செய்வதில் சிரமம்.

8.அதிக பாதிப்பு உள்ளவர்களுக்கு ஹெர்னியா ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.

இப்பாதிப்பை கண்டறிய எளிய பரிசோதனை முறைகள் உண்டு என்றாலும் அருகிலுள்ள‌ மகளிர் நல மருத்துவரிடமோ , இயன்முறை மருத்துவரிடமோ ஆலோசனை பெறுவது நன்று ‌.

இந்த பிரச்சினை பெண்களுக்கு ‌மட்டுமே வருமா என்றால் இல்லை..

அதிக உடல் ‌எடை‌ வலுவேற்றும் பயிற்சி செய்யும் ஆண்கள், தடகள பயிற்சி செய்யும் ஆண்களுக்கும் இத்தசை பிரிதல் ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் ஆண்களுக்கு ஏற்படும் இப்பாதிப்பே தொப்பை (beer belly), உடல் எடை அதிகரிப்பு என்று தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.

இந்த பாதிப்பு உள்ளவர்கள் சில உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டி உள்ளதால் தகுந்த மருத்துவ நிபுணர்களிடம் , சிகிச்சையும் பயிற்சியும் பெற வேண்டும் .

Representational Image

இணையதள வீடியோக்களில் வரும் உடற்பயிற்சிகளை பார்த்து அப்படியே செய்ய முற்படுவதை தவிர்ப்பது நலம்

தற்போது, கர்ப்பிணி தாய்மார்க்ளுக்கு உடற்பயிற்சி பயிற்றுவிக்க நிபுணர்கள் உள்ளனர் , உங்களது மகளிர் நல மருத்துவரின் அனுமதியோடு இது போன்ற உடற்பயிற்சிகளை செய்தால் பிரசவத்திற்கு பின்பு ஏற்படும் இது போன்ற சிறு பாதிப்புகளை குறைக்க வழிவகுக்கும்.

குழந்தை பிறந்த பின் பயிற்றுவிக்கப்படும் பிஸியோதெரபி பயிற்சிகளை செய்வதன் மூலமும் இந்த பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.

குழந்தை பிறப்பிற்கு பின்னர் உங்களது உடலில் ஏற்பட்ட மாற்றங்கள், எந்த வகையான பிரசவம் என்பதை பொறுத்து பயிற்சிகளில் மாற்றம் ஏற்படும். ஆகவே , தகுந்த மருத்துவ நிபுணர்களிடம் நேரடி ஆலோசனை மற்றும் பயிற்சி பெறுவதே உடல் நலத்திற்கு சிறந்தது.

ந.கிருஷ்ணவேணி,

இயன்முறை மருத்துவர்.

(மகளிர் நலம்).

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.