புதுச்சேரி: புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் பசுமை வளாக செயல்பாடுகளை அங்கீகரிக்கும் வகையில், அப்பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசு “மாவட்ட பசுமை சாம்பியன்” விருதை வழங்கியுள்ளது..
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங் தலைமையில், கடந்த 4 ஆண்டுகளாக ‘பசுமை வளாகம்’ என்ற திட்டத்தின் கீழ் பல நிலையான வளர்ச்சி மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான முயற்சிகளை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டங்கள் மூலமாக தூய்மை செயல்திட்டம், முதன்மைத் திட்டங்கள், பல நிலையான வளர்ச்சி இலக்குகள், பல்கலைக்கழக மானியக் குழுவின் கட்டாயத் தேவைகள் போன்ற திட்டங்களையும் கல்வி அமைச்சகம், சுற்றுச்சூழல் அமைச்சகம், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் போன்ற அமைச்சகங்களின் அத்தியாவசிய தேவை வெற்றிகரமாக செயல்படுத்தி கொண்டு வருகிறது.
இந்த முன்னோடி முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரகக் கல்வி மன்றம், உயர்கல்வித்துறை, கல்வி அமைச்சகம், இந்திய அரசு, 2021-22 ம் ஆண்டிற்கான ‘மாவட்ட பசுமை சாம்பியன்’ விருது வழங்கி புதுவை பல்கலைக்கழகத்தை அங்கீகரித்துள்ளது.
சிறந்த பசுமையாக்க நடைமுறைகள் மற்றும் நிலையான கழிவு மேலாண்மை, நீர்மேலாண்மை, ஆற்றல் மேலாண்மை, சுகாதாரம் மற்றும் பசுமை மேலாண்மை ஆகியவற்றுடன் இணங்கி நிற்கும் நிலையான நடவடிக்கைகள் மூலம் ஸ்வச்தா செயல் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.