மதுரை பாண்டிகோயில் தட்டுப்பணம் ரூ.3 லட்சம் திருட்டு வழக்கில் 5 பேருக்கு நிபந்தனை முன்ஜாமீன்

மதுரை: மதுரை பாண்டிகோயிலில் தட்டுப்பணம் ரூ.3 லட்சம் திருடப்பட்ட வழக்கில் 5 பேருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை பாண்டிகோயிலில் அறக்கட்டளை அலுவலகத்தில் நுழைந்து 12.1.2022-ல் தட்டு காசு ரூ.3 லட்சம் திருடப்பட்டது தொடர்பாக செல்லப்பாண்டி பூசாரி, மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் லட்சம் என்ற லெட்சுமி, ரெபெல்லோ, ராஜேஷ்பாண்டி, பாண்டியராஜன், ரிஷிபாண்டியன் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி 5 பேரும் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி கே.முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், ‘‘அந்தப்பணம் ரெபெல்லோ பாண்டிகோயிலில் பூசாரியாக பணிபுரிந்த காலத்தில் வசூலான தட்டுக்காசு. அது செல்லப்பாண்டி பூசாரிக்கு சொந்தமானது இல்லை. பாண்டிகோயில் பூசாரி உரிமை தொடர்பான மோதலில் எங்கள் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

பாண்டிகோயில் தொடர்பாக இரு தரப்பு இடையே பிரச்சினை உள்ளது. உரிமையியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. உயர் நீதிமன்றம் தற்போதைய நிலை தொடர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ரெபெல்லோவும் அவரது முறை வந்த போது பூசாரியாக இருந்துள்ளார். அப்போது தட்டில் விழுந்த பணம்தான் அந்தப்பணம் என்று கூறியுள்ளார்.இதனால் மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது.

ரெபெல்லா 2 வாரத்தில் மதுரை 6-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ரூ. 3 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும். பின்னர் கீழமை நீதிமனறத்தில் உரிய உத்தரவாதம் அளித்து ஜாமீன் பெறலாம்.மனுதாரர்கள் ஒரு மாதத்துக்கு தினமும் காலை 10.30 மணிக்கு மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.

பின்னர் தேவைப்படும் போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும். சாட்சிகளை கலைக்கக்கூடாது. தலைமறைவாகக் கூடாது. தலைமறைவானால் தனி வழக்குப்பதிவு செய்ய வேண்டும். நிபந்தனைகளை மீறினால் கீழமை நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கலாம்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.