மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி கட்ட இலக்கு வைத்துச் செயல்பாடு – பிரதமர் மோடி

மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகளைக் கட்ட இலக்கு வைத்துள்ளதால், இந்தியாவில் அடுத்த பத்தாண்டுகளில் சாதனை அளவிலான எண்ணிக்கையில் புதிய மருத்துவர்கள் இருப்பார்கள் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் புச் நகரில் பட்டேல் சமுதாய சங்கத்தால் கட்டப்பட்டுள்ள 200 படுக்கை வசதி கொண்ட உயர் சிறப்பு மருத்துவமனையைப் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் திறந்து வைத்துள்ளார்.

நிகழ்ச்சியில் காணொலியில் உரையாற்றிய பிரதமர் மோடி, 2001ஆம் ஆண்டு நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட கட்ச் பகுதியின் தலைவிதி, உயர் சிறப்பு மருத்துவமனையால் மாற்றி எழுதப்படுவதாகத் தெரிவித்தார்.

200 படுக்கை வசதி கொண்ட இந்த மருத்துவமனை குறைந்த செலவில் மக்களுக்குத் தரமான மருத்துவ வசதிகளை வழங்கும் எனக் குறிப்பிட்டார்.

20 ஆண்டுகளுக்கு முன்னால் குஜராத்தில் 9 மருத்துவக் கல்லூரிகளும் அவற்றில் 1100 மருத்துவப் படிப்பு இடங்களும் மட்டுமே இருந்ததாகத் தெரிவித்தார். இன்று 36 மருத்துவக் கல்லூரிகளும் ஆறாயிரம் மருத்துவப் படிப்பு இடங்களும் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அனைவருக்கும் மருத்துவக் கல்வி கிடைக்கச் செய்ய ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி கட்ட இலக்கு வைத்துள்ளதாகவும், அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவில் சாதனை அளவிலான எண்ணிக்கையில் புதிய மருத்துவர்கள் இருப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

சிறந்த மருத்துவ வசதி நோய்க்கான சிகிச்சை மட்டுமல்லாமல் சமூக நீதி மேம்பாட்டின் அடையாளமும் ஆகும் எனத் தெரிவித்தார். ஏழைகளுக்குக் குறைந்த செலவில் தரமான சிகிச்சை கிடைக்கும்போது அவர்களுக்கு அரசின் மீது நம்பிக்கை ஏற்படுவதாகத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.