அசன்சோல் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் – சத்ருகன் சின்ஹா வெற்றி

கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் அசன்சோல் தொகுதியில் பா.ஜ.க.வை சேர்ந்த பாபுல் சுப்ரியோ எம்.பி.யாக இருந்தார். அவர் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். இதையடுத்து, அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது.
அசன்சோல் தொகுதியில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரபல நடிகர் சத்ருகன் சின்ஹாவும், பா.ஜ.க. சார்பில் எம்.எல்.ஏ.வான அக்னிமித்ரா பவுலும் போட்டியிட்டார்.
இந்நிலையில், அசன்சோல் தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. தொடக்கத்தில் இருந்தே சத்ருகன் சின்ஹா முன்னிலையில் இருந்து வந்தார்.
இறுதியில், சத்ருகன் சின்ஹா 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். அவர் 6.25 லட்சத்துக்கும் மேலான வாக்குகளைப் பெற்றார். அடுத்த இடத்தில் பாஜக வேட்பாளர் அக்னி மித்ரா பவுல் 3.45 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார்.
இதேபோல், மேற்கு வங்காளத்தின் பாலிகங்கே சட்டசபை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பாபுல் சுப்ரியோ வெற்றி பெற்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.