கோலிவுட் ஸ்பைடர்: அஜித்திடம் கோரிக்கை வைக்கும் பெப்சி; கௌதம் மேனன் கதைக்கு நோ சொன்னாரா வடிவேலு?

* ‘புஷ்பா’வில் ஒரு பாடலுக்கு சமந்தா குத்தாட்டம் ஆடியதை போல, பல முன்னணி ஹீரோயின்களுக்கும் ஒரு பாடலுக்கு ஆடும் ஆசை வந்திருக்கிறது. இதற்கு வழங்கப்படும் பெரிய சம்பளமும் ஒரு காரணம். ‘பீஸ்ட்’ நாயகி பூஜா ஹெக்டே, தெலுங்கில் வெங்கடேஷ், வருண்தேஜ், தமன்னா, மெஹ்ரின் நடிக்கும் ‘எஃப் 3’ படத்தின் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார். இதற்கும் தேவிஶ்ரீபிரசாத்தான் இசை. இந்தப் படம் அடுத்தமாத கடைசியில் வெளியாகிறது.

சமந்தா, பூஜா ஹெக்டே

* வருடத்திற்கு அரை டஜன் படங்களிலாவது நடித்து விடும் ஐடியாவில் இருக்கிறார் வடிவேலு. இயக்குநர்கள் சுராஜ், மாரி செல்வராஜ், பி.வாசு ஆகியோரின் படங்களைக் கைவசம் வைத்திருக்கும் அவரிடம் கௌதம் மேனனும் கதை சொல்லியிருக்கிறார். முழுக்கதையையும் கேட்ட வடிவேலுவின் முகத்தில் எந்த ரியாக்‌ஷனும் இல்லையாம். ‘நாம ரெண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணி, புதுக்கதை பிடிப்போம் சார்’ என புயல் சொன்னதை, இயக்குநர் ரசிக்கவில்லையாம். ஆனாலும் வேறு கதையோடு புயலை அணுக முடிவெடுத்துள்ளார் கௌதம்.

* முன்பு பல நாள்கள் சிம்புவின் கால்ஷீட் வீணானது. அப்போதெல்லாம் அவர் ஷூட்டிங் ஸ்பாட் வரவில்லையென்றால் ‘அவர் எங்கே இருக்கிறார்? ஏன் வரவில்லை? யாரிடம் அவரைப் பற்றி கேட்பது?’ எனத் தெரியாமல் படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும் தவிப்பது வழக்கம். இப்படித்தான் நெடுங்காலமாக நடந்து வந்தது. இப்போது இந்தக் குழப்பத்தை ஈடுகட்ட டி.ஆர் முன்வந்திருக்கிறார். இனி சிம்புவின் கால்ஷீட், சம்பளம், போன்றவற்றை அவரே கவனிக்க உள்ளார். இது குறித்த முக்கியமான விஷயங்களுக்கும் அவரே பொறுப்பு ஏற்கப் போகிறார்.

சிம்பு

* அஜித்தின் சமீபகால படங்களின் மொத்த படப்பிடிப்பையும் ஹைதராபாத்தில் வைத்துக்கொள்வதால் இங்கே இருக்கும் பெப்சி தொழிற்சங்கத்தினர் முணுமுணுக்கத் துவங்கிவிட்டனர். இங்குள்ள தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்காமல் போவதைச் சுட்டிக்காட்ட அஜித்தை நேரில் சந்தித்து முறையிட நேரம் கேட்டு இருக்கிறார்கள். ஆனால் வழக்கம்போல் யாரையும் சந்திக்க விருப்பப்படாத அஜித் கோரிக்கைகளை எழுதித் தரச்சொல்லி கேட்டு இருக்கிறாராம். இதற்கு என்ன மாற்றாகச் செய்வது என்ற ஆலோசனையில் அவர்கள் இருப்பதாகவும் தகவல்.

* ஜோதிகா நடித்த ‘உடன்பிறப்பே’ படத்தின் இயக்குநர் இரா.சரவணன், அடுத்து கார்த்தியை வைத்து இயக்குவார் எனத் தகவல் சலசலத்தது. ஆனால், அதில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இப்போது பிரகாஷ்ராஜ், கருணாஸ் நடிக்கும் ஒரு திரைப்படத்திற்கு பூஜை போட்டு இருக்கிறார்கள். இந்த காம்பினேஷன் புதுசாக இருக்கும் எனவும், முற்றிலும் வித்தியாசமான கதை இது என்கிறார்கள் இரா.சரவணனுக்கு நெருங்கியவர்கள்.

ஐஸ்வர்யா – இளையராஜா

* இளையராஜா மீது குரு போன்ற மரியாதை கொண்டவர் நடிகர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இப்போது அவர் இயக்கும் இந்திப் படத்திற்கு இசையமைக்க ராஜாவைக் கேட்டு இருக்கிறார். அதன் கதையைக் கேட்ட ராஜா, நன்றாக இருப்பதாகக் கூறி அதில் தன் பங்காக என்ன புதுமை செய்யலாம் என்ற அபிப்பிராயத்தையும் சொல்லியிருக்கிறார். இதனிடையே தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து விவகாரத்தையும் ஐஸ்வர்யாவிடம் முழுதாகக் கேட்டு தெரிந்துகொண்டிருக்கிறார் இளையராஜா. இருவரையும் கூப்பிட்டு ராஜா சமாதான முயற்சி செய்ய உள்ளார் என்றும் கோடம்பாக்கத்தில் தகவல் கேட்கிறது.

பசுமை சூழ்ந்த மாடித்தோட்டச் செடிகளுக்கு மத்தியில் நடிகை சீதா

* 80ஸ் நடிகைகளில் தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர்களில் நடிகை சீதாவும் ஒருவர். இப்போது அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதால் யூடிப்பில் மிகத் தீவிரமாக இறங்கிவிட்டார். வீட்டு மாடித்தோட்டம் போடுவதிலிருந்து காய்கறிகள் விதவிதமாக வளர்ப்பது முதற்கொண்டு தொகுத்து வழங்குகிறார். அதிலும் ஹைலைட்டாக அவர் முதன் முதலில் வீணை கற்றுக் கொண்டது வரைக்கும் காமெடியாக தொகுத்தும் தூள் கிளப்புகிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.