சென்னை: தற்கொலைகள் அதிகரித்து வருவதால் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த உணவக ஊழியர் காந்திராஜன் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து, கடனாளி ஆகிவிட்டார். இதை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் கவலை அளிக்கின்றன. கடந்த ஒரு வாரத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பறிபோன 3-வது உயிர் இது. கடலூர் மாவட்டத்தில் ஆன்லைன் ரம்மி ஆட ஒரு மாணவர் மூதாட்டியைக் கொன்று, கொள்ளையடித்தார். குடியாத்தம் அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தவர் அடித்துக் கொல்லப்பட்டார்.
ஆன்லைன் சூதாட்டம் உடனடியாக தடை செய்யப்படாவிட்டால், அதில் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்வது தினசரி நிகழ்வாகி விடும். உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டைக் காரணம் காட்டி, இந்த உயிரிழப்புகளை தமிழக அரசு வேடிக்கை பார்க்கப் போகிறதா?
மதுவும், லாட்டரிச் சீட்டும்ஏழை, நடுத்தரக் குடும்பங்களை எவ்வாறு சீரழித்தனவோ, அதைவிட மோசமானசீரழிவுகளை ஆன்லைன் சூதாட்டங்கள் ஏற்படுத்துகின்றன. எனவே, இனியும் தாமதிக்காமல் திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை தமிழகஅரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.