தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷியா- கீவை சுற்றி 900 பொதுமக்கள் கொன்று குவிப்பு

கீவ்:
கருங்கடலில் உள்ள ரஷிய போர்க்கப்பலை உக்ரைன் அழித்ததையடுத்து, ரஷியா தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. குறிப்பாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படும் என அச்சுறுத்தியது. 
ரஷியப் படைகள் கிழக்கு உக்ரைனில்  புதிய தாக்குதலுக்குத் தயாராகிவிட்டன. மேலும் தெற்கு துறைமுக நகரமான மரியுபோலிலும் சண்டை தொடர்கிறது. வடகிழக்கு நகரமான கார்கிவில், குடியிருப்பு பகுதியின் மீது ஷெல் குண்டுகளை வீசியதில் 7 மாத குழந்தை உட்பட  7 பேர் கொல்லப்பட்டதாகவும், 34 பேர் காயமடைந்ததாகவும் பிராந்திய ஆளுநர் ஓலே சினேஹுபோவ் தெரிவித்தார்.
இந்நிலையில், தலைநகருக்கு வெளியே 900க்கும் மேற்பட்ட மக்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறி உள்ளனர். 
கீவை சுற்றி உள்ள நகரங்களில் ஆங்காங்கே உடல்கள் கைவிடப்பட்ட நிலையில் கிடப்பதாகவும், பல உடல்கள் தற்காலிகமாக புதைக்கப்பட்டிருப்பதாகவும் அப்பகுதி காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார். கொல்லப்பட்டவர்களில் 95 சதவீதம் பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் இறந்ததை தரவுகள் காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 
ரஷியாவுடனான போரில் 2500 முதல் 3000 வரையிலான உக்ரைன் படையினர் இறந்திருப்பதாகவும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் உக்ரைன் அதிபரி ஜெலன்ஸ்கி கூறி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.