இஸ்லாமாபாத் : நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பார்லிமென்டின் புதிய சபாநாயகராக, முன்னாள் பிரதமர் ராஜா பெர்வாயிஸ் அஷ்ரப், ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாகிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால், பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான், பிரதமர் பதவியில் இருந்து விலகினார். தீர்மானம்இதைத் தொடர்ந்து, எதிர்க் கட்சிகள் உருவாக்கியுள்ள கூட்டணியில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பார்லிமென்டில் ஓட்டெடுப்பு நடத்த விரும்பாமல், அவருடைய கட்சியைச் சேர்ந்த ஆசாத் காசிர், சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடந்தது. தற்போது ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு, சபாநாயகர் பதவி ஒதுக்கப்பட்டது.
அக்கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜா பெர்வாயிஸ் அஷ்ரப் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால், அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார். கடந்த 2012 ஜூன் 22 முதல், 2013 மார்ச் 16 வரை, அஷ்ரப் பாகிஸ்தான் பிரதமராக இருந்தார்.இதற்கிடையே, இம்ரான் கானின் கட்சியைச் சேர்ந்த துணை சபாநாயகர் காசிம் கான் சுரிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல் செய்ய ஆளும் கூட்டணி முடிவு செய்தது.
இதையடுத்து அவர், தன் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.சட்டசபையில் ரகளைபாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண சட்டசபையில் நேற்று பெரும் ரகளை ஏற்பட்டது. இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சியின் உறுப்பினர்கள், துணை சபாநாயகர் முகமது மஜாரியை கடுமையாக தாக்கியதுடன், அவரை கீழே தள்ளி இழுத்துச் சென்றனர். எதிர்க்கட்சியினருடன் சேர்ந்து, தங்களை பழிவாங்கி விட்டதாக துணை சபாநாயகர் மீது அவர்கள் குற்றம் சாட்டினர்.
Advertisement