புதுடெல்லி:
பிரதமர் மோடி, நாளை முதல் 20-ந் தேதி வரை குஜராத்தில் மாநிலத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
18ந் தேதி அன்று மாலை 6 மணியளவில், காந்திநகரில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கான கட்டுப்பாட்டு மையத்தை பிரதமர் பார்வையிடுகிறார்.
ஏப்ரல் 19 காலை பனஸ்கந்தாவின் தியோதரில் உள்ள பால்பண்ணை வளாகத்தில், பல்வேறு திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிப்பதுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அன்று பிற்பகல் ஜாம் நகரில் உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருந்துகளுக்கான சர்வதேச மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
ஏப்ரல் 20ந் தேதி காலை, காந்திநகரில் சர்வதேச ஆயுஷ் முதலீடு மற்றும் புதுமைக் கண்டுபிடிப்பு மாநாட்டையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். அன்று பிற்பகலில் டாஹோத்தில் ரூ.22,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
மேலும் நர்மதா ஆற்றுப்படுகையில், சுமார் ரூ.840கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள டாஹோத் மாவட்ட தென் பகுதி மண்டல குடிநீர் வினியோகத் திட்டத்தையும் பிரதமர் தொடங்கிவைக்க உள்ளார்.