பிரித்தாளும் முயற்சிகளை முறியடிப்போம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சரத் பவார், சீதாராம் யெச்சூரி, ஃபரூக் அப்துல்லா, ஹேமந்த் சோரன் உள்ளிட்ட 13 எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், “மதரீதியாக பிரித்தாள மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முறியடித்து அமைதி காக்க வேண்டும். நாட்டின் பல மாநிலங்களில் அண்மையில் வெடித்த வகுப்புவாத வன்முறையை கண்டிக்கிறோம். நாட்டில் அதிகரித்து வரும் வெறுப்பு பேச்சுகள் கவலை அளிக்கிறது.
நாட்டில் அமைதி, மத நல்லிணக்கத்தை பேண வேண்டும். இந்தியாவின் சமுதாய ஒற்றுமையை வலுப்படுத்த உறுதி எடுத்துக் கொள்வோம். வகுப்புவாத வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். வெறுப்பு கருத்துகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கவலை அளிக்கிறது. மேலும் இவை குறித்த பிரதமரின் அமைதி அதிர்ச்சியளிக்கிறது” என தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சரத்பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் மு க ஸ்டாலின், சீதாராம் எச்சூரி, பரூக் அப்துல்லா, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட 13 முக்கிய கட்சியை சேர்ந்தவர்கள் இணைந்து இந்த கூட்டறிக்கையை வெளியிட்டு இருக்கின்றனர். 2024 தேர்தலை மையமாக வைத்து பாஜகவை எதிர்ப்பதற்கான முதல்படியாக இந்த கூட்டறிக்கை பார்க்கப்படுகிறது.