மாஜி அதிகாரிக்கு எதிரான சுற்றறிக்கையை நீக்க உத்தரவு| Dinamalar

புதுடில்லி : ‘அம்னெஸ்டி இந்தியா’ என்ற அரசு சாரா அமைப்பின் முன்னாள் தலைவருக்கு எதிரான, தேடப்படும் நபர் என்ற சுற்றறிக்கையை திரும்பப் பெறும்படி, சி.பி.ஐ.,க்கு டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதே நேரத்தில், ‘மன்னிப்பு கேட்கத் தேவையில்லை’ என கூறியுள்ளது.வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றதில் மோசடி செய்ததாக, அம்னெஸ்டி இந்தியா அமைப்பின் முன்னாள் தலைவர் ஆகார் படேலுக்கு எதிரான வழக்கை, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்நிலையில், அவருக்கு எதிராக, தேடப்படும் நபர் என்ற சுற்றறிக்கையை சி.பி.ஐ., பிறப்பித்தது.

இதையடுத்து, சமீபத்தில் அவர் அமெரிக்கா செல்ல முயன்றபோது, டில்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். இது தொடர்பான வழக்கை விசாரித்த டில்லி விசாரணை நீதிமன்றம், சி.பி.ஐ., உடனடியாக அந்த சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்றும், ஆகார் படேலிடம் எழுத்துபூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.

விசாரணை

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஆகார் படேல், அமெரிக்காவுக்கு செல்ல டில்லி விமான நிலையம் சென்றார். ஆனால், மீண்டும் தடுத்து நிறுத்தப்பட்டார். அதையடுத்து, சி.பி.ஐ.,க்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவர் தொடர்ந்தார்.

இதை விசாரித்த டில்லி சிறப்பு நீதிமன்றம், ஆகார் படேலுக்கு எதிரான சுற்றறிக்கையை திரும்பப் பெறும்படி, சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டுள்ளது.அதே நேரத்தில் மன்னிப்பு கேட்கத் தேவையில்லை என, அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.