ஷாங்காய்: சீனாவின் ஷாங்காய் நகரில், ‘கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, வீடுகளை ஒப்படையுங்கள்’ என உத்தரவிடப்பட்டுள்ளது, பொதுமக்களை ஆத்திரமடைய வைத்துள்ளது.
நம் அண்டை நாடான சீனாவில், கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் பெரும்பாலான பாதிப்புகள், நாட்டின் மிகப்பெரிய நகரமான ஷாங்காயில் பதிவாகின்றன. இந்நிலையில், சீனாவில் நேற்று முன்தினம் 29 ஆயிரம் பேர் வைரசால் பாதிக்கப்பட்டனர். இதில், 27 ஆயிரம் பேர் ஷாங்காயில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், நகரில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
இதையடுத்து, வீடுகளை சிகிச்சை அளிக்கும் மையங்களாக மாற்ற ஷாங்காய் நிர்வாகம் முடிவெடுத்து, அவற்றை ஒப்படைக்கக் கோரி, பொதுமக்களிடம் உத்தரவிட்டுள்ளது. எனவே, போலீசார் வீடு வீடாகச் சென்று, அங்கிருந்து மக்களை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.மக்களை போலீசார் மிரட்டும் காட்சிகள் அடங்கிய, ‘வீடியோ’க்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, சீன மக்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement