லக்னோ: உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதால் உத்தரபிரதேச முதல்வரை பார்ப்பதற்காக 10 வயது சிறுமி ஒருவர் பிரயாக்ராஜிலிருந்து லக்னோவுக்கு கிட்டத்தட்ட 200 கிலோ மீட்டர் மாரத்தன் ஓட்டத்தில் சென்று சந்தித்தார். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்த ரயில்வே ஊழியர் நீரஜ் குமாரின் மகள் காஜல் (10). ஓட்டப்பந்தய வீராங்கனை இவர், பல்வேறு மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றார். ஆனால் அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதையடுத்து அந்த சிறுமி, பிரயாக்ராஜிலிருந்து லக்னோவுக்கு மாரத்தன் ஓட்டமாக ஓடினாள். கிட்டத்திட்ட 200 கிலோ மீட்டர் தூரத்தை 5 நாட்களில் கடந்து மாநில தலைநகர் லக்னோவை சென்றடைந்தார். பின்னர் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார். அவரிடம் பேசிய காஜல், ‘இதுவரை பல மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டேன். ஆனால், அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை’ என்றார். சிறுமியின் கோரிக்கையை ஏற்ற முதல்வர் யோகி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதுகுறித்து காஜல் கூறுகையில், ‘முதல்வர் யோகியை சந்தித்தேன். அவர் எனக்கு பரிசு வழங்கினார். விளையாட்டுக் கல்லூரியில் சேரவும், விடுதி வசதிகளை ஏற்படுத்தி தரவும் உத்தரவாதம் அளித்துள்ளார். நான் நாட்டுக்காக ஓடி பதக்கம் வெல்வேன்’ என்றார்.