டெல்லி ஜகாங்கிர்புரியில் நடைபெற்ற அனுமன் யாத்திரையின் போது நடந்த வன்முறை தொடர்பாக 14 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு டெல்லியின் வடமேற்கு பகுதியில் உள்ள ஜஹாங்கிர்புரியில் பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டனர். அப்போது அடையாளம் தெரியாத சிலர், பக்தர்கள் மீது கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அது இரு பிரிவினரிடையே மோதலாக வெடித்தது. இரு தரப்பை சேர்ந்தவர்களும் ஒருவரையொருவர் கற்களால் வீசியும், ஆயுதங்களைக் கொண்டும் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதில் பொது மக்களில் ஒருவர் காயமடைந்ததுடன் மோதலை தடுக்க முயன்ற 9 காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டது.
வன்முறைக்கு காரணமானவர்களுக்கு முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, காவல் துறையின் மூத்த அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி வாயிலாக பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அசம்பாவிதங்களை தவிர்க்க டெல்லி – உத்தரப்பிரதேச எல்லையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், வன்முறையில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதில் 14 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது
.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM