அண்மையில் டாடா நிறுவனம் ‘டாடா நியூ (Tata Neu)’ எனும் செயலியை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் ஏர் இந்தியாவின் விமான டிக்கெட்கள் முதல் மளிகை பொருட்கள் வரை அனைத்தையும் ஆன்லைன் மூலம் வாங்கிக்கொள்ளலாம் என்று கூறியது. மேலும் பண பரிவர்த்தனை செய்துகொள்ளும் டாடா வாலட்டையும் (Neu digital wallet) அறிமுகப்படுத்தியது டாடா.
அதைத்தொடர்ந்து தற்போது டாடா மோட்டார்ஸின் கார்களை டாடா நியூ செயலியைப் பயன்படுத்தி வாங்கும் வசதியை கொண்டுவரவுள்ளது. மேலும் ‘தனிஷ்க்(Tanishq)’, ‘ஏர் இந்தியா (Air India)’, ‘விஸ்தாரா(Vistara)’ மற்றும் ‘டைட்டன்(Titan)’ போன்ற பிராண்ட்களையும் இதில் இணைக்கப்போவதாக கூறியுள்ளார் டாடா டிஜிட்டல் சிஇஓ பிரதிக் பால் (Pratik Pal). இது இரண்டு மாதங்களில் நடைமுறைக்கு வரும் என்றும் கூறியுள்ளார்.
இது பற்றிக் கூறிய பிரதிக் பால், “ஓவ்வொரு இந்தியரும் காலை எழுந்ததிலிருந்து தூங்கப்போகும் வரை எது வாங்க வேண்டுமென்றாலும் எங்களின் டாடா நியூ(Tata Neu) செயலியைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். “ஒவ்வொரு நுகர்வோரின் கைகளிலும் இது இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் – அது எங்கள் பார்வை. ஒவ்வொரு இந்திய நுகர்வோரும் காலையில் எழுந்து, நாள் முழுவதும் இந்த செயலியைப் பயன்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.