சென்னை : உலகம் முழுவதும் இயேசுபிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சர்ச்சுகளில் அதிகாலையில் நடந்த சிறப்பு வழிபாடுகளில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு அடுத்து கிறிஸ்துவர்களின் முக்கிய பண்டிகை, ஈஸ்டர். சிலுவையில் அறையப்பட்டு, கல்லறையில் அடைக்கப்பட்ட இயேசு பிரான், மூன்றாம் நாள் அதில் இருந்து உயிர்த்தெழுந்தார். இந்த நாளே ஈஸ்டர் திருநாளாக கொண்டாடப்படுகிறது.
கிறிஸ்துவர்கள் அனுசரித்த 40 நாள் தவக் காலத்தின் முக்கியமான நாளாகவும் ஈஸ்டர் கருதப்படுகிறது. இந்த திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
சென்னையில் சாந்தோம், பெசன்ட் நகர், பாரீஸ் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள சர்ச்சுகளில் நேற்று நள்ளிரவு இயேசுவின் உயிர்ப்பை நினைவு கூரும் வகையில், சிறப்பு திருப்பலி நடந்தது. இன்று காலையும் சிறப்பு திருப்பலி நடக்கிறது.
முன்னதாக நேற்று மாலை, சிலுவை பாதை ஆராதனையும் நடத்தப்பட்டது. ஈஸ்டரை முன்னிட்டு ஏராளமான கிறிஸ்துவர்கள், குடும்பத்தோடு திருப்பலியில் பங்கேற்றனர்.
Advertisement