புதுடில்லி-நாட்டின் பாதுகாப்புக்கு எற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் பற்றி ஆலோசிக்க, டில்லியில் ராணுவ கமாண்டர்கள் மாநாடு இன்று துவங்கி ௨௨ வரை நடக்கிறது.ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறப்பட்டுள்ளதாவது:நாட்டின் பாதுகாப்பு நிலைமை பற்றி ஆலோசிக்க ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் ராணுவ கமாண்டர்கள் மாநாடு நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான முதல் ராணுவ கமாண்டர்கள் மாநாடு, டில்லியில் இன்று துவங்கி, ௨௨ம் தேதி வரை நடக்கிறது. ராணுவ தலைமை தளபதி நரவானே தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில், எல்லையில் நிலவும் நிலைமை, பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் பற்றி ஆலோசிக்கப்படும். எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்துவது பற்றியும் ஆலோசிக்கப்படும். எல்லையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, உள்நாட்டிலேயே ராணுவ தளவாடங்களை தயாரிப்பது, ஆயுதங்களை நவீனப்படுத்துவது ஆகியவை பற்றியும் மாநாட்டில் விவாதிக்கப்படும். ரஷ்யா – உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றியும் மாநாட்டில் விவாதிக்கப் படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Advertisement