சென்னையில் கஞ்சா விற்பனைக்குத் துணை போனதாகக் கூறப்படும் இரண்டு காவலர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரான திலீப்குமார் என்பவன் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக கீழ்ப்பாக்கம் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
திலீப்குமாரை கைது செய்து விசாரித்தபோது, அயனாவரம் பனந்தோப்பு காலணி ரயில்வே குடியிருப்புகளுக்கு அருகே, தீக்கா குளம், ஏகாங்கிபுரம் கான்ஸ்டபிள் சாலை ஆகிய பகுதிகளில் காலி இடங்களில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவது தெரியவந்துள்ளது.
ரயில்வே காவல் துறை டி.எஸ்.பி ஒருவரின் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சக்திவேல் என்ற காவலரும், டிஜிபி அந்தஸ்தில் உள்ள காவல் அதிகாரியின் அலுவலகத்தில் வேலைபார்க்கும் செல்வகுமார் என்ற காவலரும் இந்த கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக இருப்பது தெரியவந்துள்ள நிலையில், அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.