சென்னை:
பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு வரும் 24ம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சிறப்பு கிராம சபை கூட்டம் தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், கூறியிருப்பதாவது:-
பஞ்சாயத்து ராஜ் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஊரக வளர்ச்சி மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்கு என்ற தலைப்பில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும். கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதித்து, உறுதிமொழி ஏற்கவேண்டும். கிராம சபை கூட்டம் நடத்தப்படுவதை அனைத்து அனைத்து மாவட்ட கலெக்டர்களும் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினம் போன்ற நாட்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக கிராமசபை கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், பஞ்சாயத்து ராஜ் தினத்தன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த பிறகு நடக்கும் முதல் கிராம சபை கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.