எழுத்தாளர், சிந்துவெளி ஆய்வாளர் மற்றும் ஒடிசா மாநில முதல்வரின் தலைமை ஆலோசகர் ஆர். பாலகிருஷ்ணன் எழுதிய தமிழ் நெடுஞ்சாலை நூல் அறிமுக விழா திருச்சியில் நடைபெற்றது. களம் இலக்கிய அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் தமிழ்நாடு முதல்வரின் முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன், திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன், எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, களம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் க. துளசிதாசன், தமிழ்நாடு பாடநூல் கழக இயக்குநர் தே. சங்கர சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். இந்தியாவில் தமிழ் வழியில் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்ற முதல் தமிழ் இலக்கிய மாணவர் ஆர். பாலகிருஷ்ணன், குடிமைப்பணி, தேர்தல் பணி, பயணம், சிந்துவெளி ஆய்வு, இலக்கியம் என்று பல்வேறு பரிமாணங்கள் கொண்ட தனது அனுபவங்களை தமிழ் நெடுஞ்சாலை நூலில் பகிர்ந்து கொண்டுள்ளார். நிகழ்ச்சியில் பேசிய முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன் “தமிழ் நெடுஞ்சாலை நூல் பல ஆயிரம் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தி அவர்களை அதிகாரத்தின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லும்… தமிழ் படித்தால் என்ன செய்ய முடியும் என்று கேட்பவர்களுக்கு பதில் அளிக்கும் சிறந்த நூல் இது” என்று இந்நூலை அறிமுகப்படுத்தினார்.
“ஆர் பாலகிருஷ்ணன், அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களிடமும் தன் கருத்தை தைரியமாக எடுத்துச் செல்பவர். குடிமைப் பணி மட்டுமின்றி சிந்துவெளி ஆய்வு, பானைத்தடம், இடப்பெயர் ஆய்வு, என தொடர்ச்சியாக தமிழ், தமிழ் மண் சார்ந்து வாழக்கூடியவர். பல திரைப்படங்கள் எடுக்கும் அளவுக்கு இந்நூலில் ஏராளமான திருப்பங்கள் உள்ளன” என்றும் கூறினார். அதுமட்டுமின்றி, தாமிரபரணி கரை பகுதியில் கடந்த ஆண்டு நடைபெற்ற அகழாய்வு குறித்து பேசிய த. உதயச்சந்திரன், “கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் தமிழரின் நாகரிகம் 2600 ஆண்டுகள் தொன்மையானது என்று நிரூபிக்கப்பட்டது போல தாமிரபரணி ஆற்றங்கரையில் நடந்த அகழாய்வில் தமிழரின் தொன்மை 3200 ஆண்டுகள் பழமையானது என்று தற்போது அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. இது சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் முன்பானது. இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழகத்தில் இருந்து தொடங்குகிறது என்று தமிழக முதல்வர் பெருமிதத்துடன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இனி ஆண்டுதோறும் தொல்லியல் தொடர்பான புதிய கண்டுபிடிப்புகள் காத்திருக்கின்றன” என்றார்.
“ஆர் பாலகிருஷ்ணன் பழங்குடி மக்களையும், எளிய மனிதர்களையும் விரும்புகிறவர். தனக்கு கிடைத்த விருதுகளையும், உயர் பதவிகளையும் விட ஒடிசா மாநில பழங்குடிகளிடம் கிடைத்த நெகிழ்ச்சியையே முக்கியமானதாக கருதுகிறார். 4.5 லட்சம் தமிழ் ஆவணங்கள் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் பாதுகாப்பட்டு வருகிறது. அதற்கான நிதி உதவியை ஆர். பாலகிருஷ்ணன் கேட்டுள்ளார்…” என்று பேசிய இயக்குநர் கரு. பழனியப்பன் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்கு 50,000 ரூபாய் நன்கொடையாக வழங்கினார். பாலகிருஷ்ணன் அவர்களைப் பாராட்டுவதற்கு பத்து காரணங்களைப் பட்டியலிட்டு பேசிய சங்கர சரவணன், தமிழ் நெடுஞ்சாலை ஒன்றோடு நின்றுவிடக்கூடாது 2,3 என்று பல பாகங்களாகத் தொடரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஏற்புரையாற்றிய ஆர். பாலகிருஷ்ணன், “தமிழ் இலக்கியம் படித்து குடிமைப்பணியில் தேர்வு பெற்றேன் என்ற சலுகையை பெற முயற்சி செய்யாததால் தமிழகத்தில் பணிபுரியும் வாய்ப்பை நான் பெறவில்லை. தமிழ் படித்தவர்கள் வேறு எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல. ரோஜா முத்தையா நூலகத்தில் உள்ள 4.5 லட்சம் தமிழ் ஆவணங்களை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை. அனைவரும் நம்மால் முடிந்தவரை அவற்றை பாதுகாக்க உதவ வேண்டும்.” என்றார்.இந்த நிகழ்ச்சியில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.