நாளை முதல் ஆயுஷ்மான் பாரத் சுகாதார மேளா!

ஆயுஷ்மான் பாரத்
சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களின் நான்காவது ஆண்டு விழாவிற்கு மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர்
மன்சுக் மாண்டவியா
இன்று தலைமை தாங்கினார். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள், மாநில சுகாதார அமைச்சர்கள், மூத்த அதிகாரிகளுடன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், பல்வேறு மருத்துவமனைகளைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோர் காணொலி மூலம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின்போது, தொலை ஆலோசனை என்ற டிஜிட்டல் தளத்தின் மூலம் வழங்கப்படும் சுகாதாரச் சேவைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “வளர்ச்சியில் சுகாதாரம் ஒரு முக்கியமான அங்கமாகும். மாண்புமிகு பிரதமரின் தொலைநோக்கு மிக்கத் தலைமைக்கு தொலை மருத்துவ சேவைகள் ஒரு எடுத்துக்காட்டு. இ-சஞ்சீவனி, பிரதமரின் எண்ணப்படி மலிவு மற்றும் அணுகக்கூடிய சுகாதாரச் சேவையை வழங்குகிறது.” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பல மாநிலங்களில் உள்ள மக்கள் இ-சஞ்சீவனியின் பலன்களை விரைவாக அடைந்துள்ளனர் என்றும் இந்த புதுமையான டிஜிட்டல் ஊடகத்தைப் பயன்படுத்தி, மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களுடன் நோயாளிகள் தினமும் கலந்தாலோசிக்கின்றனர் என்றும் கூறினார்.

சில சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள் வாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் போன்ற சில தீவிர நோய்களுக்கான பரிசோதனை சேவைகளையும் வழங்குகின்றன என்று அமைச்சர் தெரிவித்தார். இதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே நோய் கண்டறியப்படுவதோடு மட்டுமின்றி, நோயாளிக்கு விரைவில் சிகிச்சை அளிக்கவும் முடிகிறது என்று அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர், 18ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெறுகிற ஆயுஷ்மான் பாரத்- சுகாதார நலவாழ்வு மையங்களின்
சுகாதார மேளாக்கள்
பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஆக்கப்பூர்வமாக முன்கூட்டியே மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் ஏற்படுத்த வேண்டும். இந்த சுகாதார மேளாவின்போது, காச நோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், நீரிழிவு, வாய்புற்றுநோய் பரிசோதனைகளை மாநிலங்கள் விரிவாக நடத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

“ஆரோக்கியமான குடிமக்கள் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும் மற்றும் ஆரோக்கியமான சமூகம் ஆரோக்கியமான தேசத்தை உருவாக்க முடியும். இந்த லட்சியத்தை நோக்கிய ஒரு முக்கிய நடவடிக்கையாக ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள் அமைந்துள்ளன.” என்று மன்சுக் மாண்டவியா நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

ஆயுஷ்மான் பாரத் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களின் நான்காவது ஆண்டு விழா வட்ட அளவில் ஏப்ரல் 18 முதல் 22 வரை நடைபெறும். பல்வேறு பரிசோதனைகள் மற்றும் யோகா திருவிழா இதன் ஒரு பகுதியாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.