நெல்லை மாவட்டம் மானூர் அருகே, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அரசியல் பிரமுகர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில், கல்லூரி மாணவர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சீவல்ராஜ் என்ற இளைஞர் தமிழர் விடுதலைக் களம் என்ற அமைப்பில் மானூர் பகுதி ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.
இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல வீட்டின் மாடியில் உறங்கிக் கொண்டிருந்த போது 2 மர்ம நபர்கள், இவரை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.
ஆயுதங்களுடன் அந்த மர்ம நபர்கள் வீட்டின் சுவர் ஏறி குதித்து தப்பிக்க முயன்றதைக் கண்டு கூச்சலிட்ட அக்கம்பக்கத்தினர், மாடிக்கு சென்று பார்க்கையில் சீவல் ராஜ் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அதே ஊரில் பாட்டி வீட்டில் தங்கி பயிலும் இளம்பெண்ணும் சீவல்ராஜும் காதலித்து வந்ததாகவும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் சகோதரனான அஜித் என்பவன், சீவல் ராஜுடன் அரசியல் ரீதியாக ஏற்கனவே முன்விரோதத்தில் இருந்த காளிமுத்து என்பவனுடன் இணைந்து திட்டம் தீட்டி கொலை செய்தது தெரிய வந்தது.