பெங்களூருவில் பெண் போலீஸ் அதிகாரி மர்ம மரணம் குறித்து தீவிர விசாரணை

பெங்களூரு: பெங்களூரு மாநகர சிறப்பு காவல் கண்காணிப்பாளர் ஷோபா காதவ்கர் (53) மர்மமான முறையில் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு மாநகர சிறப்பு காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஷோபா காதவ்கர் (53) புட்டனஹள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தாருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் விடுமுறை தினத்தையொட்டி அவரது குடும்பத்தினர் ஹாசனுக்கு சென்றனர். ஷோபா காதவ்கர் பணி முடித்து விட்டு வெள்ளிக்கிழமை மாலை வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் அவரது குடும்பத்தினர் ஷோபா காதவ்கரை செல்போனில் தொடர்ச்சியாக‌ அழைத்தபோதும் அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து இரவு 9 மணியளவில் போலீஸார் முன்னிலையில் கதவை உடைத்து பார்த்தபோது ஷோபா காதவ்கர் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

அவரது உடலை கைப்பற்றிய புட்டனஹள்ளி போலீஸார் இயற்கைக்கு முரணான மரணம் என வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ஷோபா காதவ்கரின் உடலை பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனிடையே பெங்களூருவுக்கு விரைந்த குடும்பத்தினர் ஷோபா காதவ்கரின் திடீர் மரணம் குறித்து சந்தேகம் கிளப்பினர். இதனால் போலீஸார் அவரது மரணத்துக்கு என்ன காரணம்? தனிப்பட்ட பிரச்சினையா? பணி ரீதியான நெருக்கடியா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குல்பர்கா போலீஸ் பயிற்சி கல்லூரியின் தாளாளராக பணியாற்றிய ஷோபா காதவ்கர் கடந்த ஆண்டு பெங்களூரு மாநகர துணை காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அண்மையில் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்ற நிலையில் அவர் உயிரிழந்திருப்பது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.