மகனுக்கு முதல்வர் பதவி: அடுத்து பிரதமர் தான்..!

பொருளாதார நிர்வாகத் திறமையின்மையால் நாட்டை பொருளாதார சீரழிவிற்கு கொண்டு சென்றுவிட்டார் என்று பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. மேலும், அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுப்பெற்றன. இதனிடையே, பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். அதில், இம்ரான் கான் அரசு தோல்வியடைந்தது.

இதனால், இம்ரான் கான் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, அந்நாட்டின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் தலைவர்
ஷெபாஸ் ஷெரீப்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, இம்ரான் கான் பதவி நீக்கம் செய்யப்பட்டதும்,
பாகிஸ்தான் பஞ்சாப்
மாகாண முதல்வர் உஸ்மான் புஸ்தார் தனது ராஜினாமாவை அம்மாகாண ஆளுநர் சவுத்ரி முகமது சர்வாரிடம் வழங்கினார். அவரது ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக் கொண்டதையடுத்து, பஞ்சாப் மாகாண அமைச்சரவை கலைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பஞ்சாப் மாகாணத்தின் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த 2ஆம் தேதி காலை 11 மணிக்கு தொடங்கப்பட இருந்தது. ஆனால், காரணமின்றி தேதி குறிப்பிடாமல் வாக்குப்பதிவு தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக சட்டப்பேரவை நேற்று கூடியது. இதற்காக அவைக்கு வருகை தந்த துணை சபாநாயகர் தோஸ்த் முகமது மஜாரி மீது இம்ரான் கான் கட்சியினர் தாக்குதல் நடத்தினர். இதனால், கடும் அமளி ஏற்பட்டது. இறுதியாக நடைபெற்ற வாக்குப்பதிவில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின்
ஹம்சா ஷபாஸ்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 197 வாக்குகளை பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பர்வேஷ் இலாஹி ஒரு வாக்கு கூட பெறவில்லை. அவரது கட்சியும், இம்ரான் கானின் பிடிஐ கட்சியும் வாக்குப்பதிவை புறக்கணித்திருந்தன என்பது கவனிக்கத்தக்கது.

ஆப்கனை குறி வைத்து பாக்., ராணுவம் தாக்குதல்!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹம்சா ஷபாஸ், பிரதமர் ஷெபாஸ் ஷெரீபின் மகனாவார். பஞ்சாப் மாகாண முதல்வராக அவரது குடும்பத்தில் இருந்து தேர்வாகும் 3ஆவது நபர் ஹம்சா ஷபாஸ். இதற்கு முன்பு, முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரிப், தற்போதைய பிரதமரும் அவரது தந்தையுமான ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரும் அம்மாகாண முதல்வர்களாக இருந்துள்ளனர். அவர்கள் இருவரும் பாகிஸ்தான் பிரதமராகியுள்ள நிலையில், அந்த வழியில் ஹம்சா ஷபாஸும் பிரதமராகும் வாய்ப்பை பெற்றிருப்பதாக அந்நாட்டு அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.