புதுடெல்லி: மேற்குவங்க இடைத்தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. மேற்குவங்கத்தில் ஒரு மக்களவை, ஒரு சட்டப்பேரவைத் தொகுதி, பிஹார், சத்தீஸ்கர், மகாராஷ்டிராவில் தலா ஒரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
மேற்குவங்கத்தின் அசன்சோல் மக்களவைத் தொகுதியில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் சத்ருகன் சின்ஹா வெற்றி பெற்றார். அந்த மாநிலத்தின் பாலிகன்ஞ் சட்டப்பேரவைத் தொகுதியில் திரிணமூல் வேட்பாளர் பாபுல் சுப்ரியோ வெற்றி பெற்றார்.
பிஹாரில் லாலு கட்சி வெற்றி
பிஹாரின் போசாகன் சட்டப்பேரவைத் தொகுதியில் எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் அமர் பஸ்வான், பாஜக வேட்பாளர் பாபி குமாரியை தோற்கடித்தார். சத்தீஸ்கரின் கெய்ராகர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஆளும் காங்கிரஸ் வேட்பாளர் யசோதா வர்மா வெற்றி பெற்றார்.
மகாராஷ்டிராவின் கோலாப்பூர் வடக்குசட்டப்பேரவைத் தொகுதியில் ஆளும் கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் ஜெயஸ்ரீ ஜாதவ், பாஜக வேட்பாளர் சத்யஜித் கதமை தோற்கடித்தார்.