வில்லியனூரில் ஆன்மிக நடைபயணம் திரளான பக்தர்கள் பங்கேற்பு| Dinamalar

வில்லியனுார் : சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலை மையமாக கொண்டு நேற்று நடந்த ஆன்மிக நடைபயணத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
வில்லியனுாரில் பழமை வாய்ந்த திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது. அதனை சுற்றிலும் பிரசித்திபெற்ற ஆறு சிவாலயங்களும், 18 சித்தர்கள் ஜீவ சமாதியும் அமைந்துள்ள ஆன்மிக பூமியாக திகழ்கிறது. திருவண்ணாமலை கிரிவலம் போல, கடந்த மார்ச் 17ம் தேதி பவுர்ணமி நாளில், திருக்காமீஸ்வரர் கோவிலில் இருந்து முதன் முறையாக ஆன்மிக நடைபயணம் துவங்கியது. சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சிவா துவக்கி வைத்தார்.நேற்று சித்ரா பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு செல்ல முடியாத புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆன்மிக நடைபயணத்தில் கலந்து கொண்டனர்.

நான்கு மாட வீதிகளில் உள்ள அம்மன், விநாயகர், தென்கலை வரதராஜப் பெருமாள் கோவில்களில் வழிபட்டு, அனந்தம்மாள் மடம் ஆஞ்சநேயர், ஏகாம்பர ஈஸ்வரன் கோவில், மூலக்கடை பாடல் பெற்ற வினாயகர் கோவில், ராமபரதேசி சித்தர் பீடம் சென்று வழிபட்டனர்.தொடர்ந்து, வி.தட்டாஞ்சாவடி தேங்காய்சுவாமி சீத்தர் பீடம், வி.மணவெளி, ஒதியம்பட்டு நான்கு ரோடு சந்திப்பு வழியாக காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்தனர்.

அங்கிருந்து சங்கராபரணி ஆறு மேம்பாலம் வழியாக திருக்காஞ்சி கெங்கைவராக நதீஸ்வரர் கோவில், உறுவையாறு சாய்பாபா கோவில், கோட்டைமேடு வழியாக மீண்டும் திருக்காமீஸ்வரர் கோவிலை வந்தடைந்தனர். ஆன்மிக நடைப்பயணம் மேற்கொண்ட பக்தர்களுக்கு வழி நெடுகிலும், குடிநீர், பானகம், பிஸ்கட்களை பொது மக்கள் வழங்கினர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.