புதுடெல்லி: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் முதல் முறையாக 2 நாள் அரசு முறைப்பயணமாக இந்தியா வர உள்ளார். வரும் 21ம் தேதி அகமதாபாத்தில் தொழிலதிபர்களை சந்தித்து பேசும் அவர், 22ம் தேதி பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இங்கிலாந்து பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவியேற்ற பிறகு, அவரது இந்தியப் பயணம் கொரோனா பாதிப்பால் இரண்டு முறை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் வரும் 21, 22ம் தேதிகளில் 2 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வர இருப்பதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் முதல் இந்தியப் பயணம் வரும் 21ம் தேதி தொடங்குகிறது. இந்திய பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் அகமதாபாத்திற்கு ஜான்சன் செல்கிறார். குஜராத்திற்கு செல்லும் முதல் இங்கிலாந்து இவர்தான். அங்கு அவர் பல்வேறு தொழிலதிபர்களை சந்திக்க உள்ளார். இதில், முக்கிய தொழில் முதலீட்டு அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளது.அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 22ம் தேதி டெல்லி செல்லும் ஜான்சன், பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். இதில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நெருங்கிய கூட்டண்மையை மேலும் வலுப்படுத்துவது, பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது, பொருளாதார உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்திய பயணம் குறித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், ‘‘எனது இந்தியப் பயணம் நமது இரு நாட்டு மக்களுக்கும் வேலை உருவாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியமான பல விஷயங்களை வழங்கும்’’ என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.* தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுஇந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்க பல்வேறு வெளிநாடுகளுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இங்கிலாந்து உடனான தடையில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை இந்த ஆண்டின் தொடக்கத்தில் முன்னெடுக்கப்பட்டது. பிரதமர் போரிஸ், மோடி பேச்சுவார்த்தையில் இதுதொடர்பாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், வரும் 2035ம் ஆண்டுக்குள் இந்தியா உடனான இங்கிலாந்தின் மொத்த வர்த்தகம் ஆண்டுதோறும் ரூ.2.75 லட்சம் கோடிக்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.