கே.ஜி.எஃப் -2 படத்திற்கு ஏற்கெனவே 350 திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. தற்போது காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. கடந்த ஏப்ரல் 13-ம் தேதியன்று விஜய்யின் ‘பீஸ்ட்’டும், அதனைத் தொடர்ந்து 14-ம் தேதியன்று யஷ் நடித்த கே.ஜி.எஃப் -2 படமும் வெளியானது. இதில் பீஸ்ட் படத்துக்கான காட்சிகள் குறைக்கப்பட்டு கே.ஜி.எஃப் -2 படத்திற்கான திரைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. என்ற தகவல் கோடம்பாக்கத்தில் உலாவுகின்றன. இதுகுறித்து திருப்பூர் சுப்ரமணியத்திடம் பேசினேன்.
‘’ கே.ஜி.எஃப் -2 படத்துக்கு பெரியளவுல வரவேற்பு இருக்கு. பொதுவா மக்களைப் பொறுத்தவரையில் யார் நடிச்சிருக்காங்கனு பார்க்கறது கிடையாது. இதைத் தமிழ் கதாநாயகர்கள் முதல்ல தெரிஞ்சுக்கணும். யார் நடிச்சிருந்தாலும் படம் நல்லா இருந்தா மட்டும்தான் பொதுமக்கள் தியேட்டருக்கு வருவாங்க. பிரமாண்டமா இருந்தா மட்டும்தான் மக்கள் பார்க்க ரெடியா இருக்காங்க. டிராமா மாதிரி இருந்தா மக்கள் பார்க்கறது ரெடியா இல்ல. ‘பாகுபலி’, ‘புஷ்பா’, ‘ஆர்.ஆர்.ஆர்.’., ‘ஸ்பைடர்மேன் 2’ எல்லாம் பிரமாண்டமா வந்தது பிரமாண்டமா வசூலாச்சு. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை மேக்கிங்கான செலவு மொத்தமே 15 சதவிகிதம்தான் பண்றாங்க. ஆனா, நடிகர்களுக்கான சம்பளம் 85 சதவிகிதம் போயிடுது.
சரி விஷயத்துக்கு வருவோம். ‘பீஸ்ட்’ படம் இந்த ஞாயிறு வரை ஓடும்னு ஏற்கெனவே ஒப்பந்தம் போட்டிருக்கோம். பொதுவா தியேட்டரைப் பொறுத்தவரை வீக் எண்ட்னா, செவ்வாய்க்கிழமைதான். அதன்பிறகுதான் படத்தை மாத்துறது பத்தி யோசிப்போம். கே.ஜி.எஃப் -2 படத்திற்கு வரவேற்பு இருக்குதுனு திடீர்னு தியேட்டர்கள் அதிகரிக்க முடியாது.
தவிர. ‘பீஸ்ட்’ மோசமான படமும் கிடையாது. ரொம்பவே மோசமா இருந்தா கண்டிப்பா மாத்தியிருக்க மடியும். ஆனா அப்படியில்லையே! கண்டிப்பா ரெண்டு வாரத்துக்கு ஓடிடும். கலெக்ஷனும் திருப்தியாதான் இருக்கு. தமிழ்ப் படங்களை பார்க்கற ரெகுலர் ஆடியன்ஸ் ‘பீஸ்ட்’ படத்துக்கு வந்துட்டுத்தான் இருக்காங்க. ’கே.ஜி.எஃப் -2’ வை பொறுத்தவரையில் ஏப்ரல் 14லியே 200லிருந்து 250 தியேட்டர்கள் வரை போட்டிருப்பாங்க. இப்ப ‘பீஸ்ட்’ ஒடும் பல தியேட்டர்கள்ல காலையில ஏழு மணி ஷோவா ‘கே.ஜி.எஃப் -2′ வை போட்டிருக்காங்க. இது ஒண்ணும் பெரியளவுல கை கொடுக்காது. ஆனா, படம் ரொம்ப ஸ்டெடியா ரெண்டு மூணு வாரத்துக்கு போகும்.’’ என்கிறார் திருப்பூர் சுப்ரமணியம்.