உக்ரைன் ராணுவ வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் : ரஷ்யா எச்சரிக்கை

மாஸ்கோ: மரியுபோல் நகரில் உள்ள உக்ரைன் வீரர்கள் சரணடைய வேண்டும் என்றும் எதிர்த்து போரிட்டால் கொல்லப்படுவார்கள் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா 53-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. கிழக்கு உக்ரைன் பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள, ரஷ்ய படைகள் அங்கு துறைமுக பகுதியான மரியுபோல் நகரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன.

இந்நிலையில் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்தியில்,‘‘மரியுபோல் நகரில் உள்ள உக்ரைன் வீரர்கள், ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைந்தால், அவர்களின் உயிர்களுக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். சரணடைய மறுத்து தொடர்ந்து சண்டையிட்டால், முற்றிலும் அழித்துவிடுவோம்’’ என எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆனால், உக்ரைன் வீரர்கள் சரணடைய அந்நாச்சு ராணுவம் தடை விதித்திருப்பதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் இகார் கோனாஷென்கோ கூறியுள்ளார்.

சரணடையும் எண்ணம் இல்லை: உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறுகையில், ‘‘டான்பாஸ் பகுதியில் உக்ரைன் தீவிரமாக போரிட்டு வருகிறது. எங்களுக்கு சரணடையும் எண்ணம் இல்லை. மரியுபோல் நகரில் உள்ள உக்ரைன் வீரர்களை கொன்றால், அது இரு நாடுகள் இடையேயான பேச்சுவார்த்தைக்கு முடிவு கட்டும்’’ என்றார்.

ரஷ்யாவுடன் கடந்த 7 வாரங்களாக நடந்த போரில் 3 ஆயிரம் வீரர்களை இழந்துவிட்டதாக உக்ரைன் முதல் முறையாக கூறியுள்ளது. ரஷ்யாவும் 20,000 வீரர்களை இழந்துவிட்டதாகவும் உக்ரைன் கூறியுள்ளது.

வெடிமருந்து ஆலை தகர்ப்பு: ரஷ்யாவின் போர்க்கப்பல் மாஸ்க்வா தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது. இதன்பின் உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. துல்லியமாக தாக்கும் ஏவுகணைகள் மூலம் நேற்று அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில், உக்ரைன் தலைநகர் கீவ் அருகே புரோவரி என்ற இடத்தில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலை தகர்க்கப்பட்டதாக ரஷ்யா பாதுகாப்புத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது. இது குறித்து புரோவரி மேயர் இகார் சபோஸ்கோ கூறுகையில், ‘‘நேற்று அதிகாலை சில கட்டமைப்புகள் தாக்கப்பட்டன’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.