எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 19 பேர் விடுதலை..!!

கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 19 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை ஊர்காவல்படை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம், புதுக்கோட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அச்சமயம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த மாதம் 29ம் தேதி 4 ராமேஸ்வரம் மீனவர்களும், கடந்த 31ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 3 மீனவர்களும், அதேபோல் கடந்த ஏப்ரல் 3ம் தேதி 12 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்தது.சிறைபிடிக்கப்பட்ட 19 மீனவர்களும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இலங்கை ஊர்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதில் ஏப்ரல் 12ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. சிறைக்காவல் முடிந்து ஏப்ரல் 12ம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டதில், மீனவர்கள் 19 பேரையும் ஏப்ரல் 18ம் தேதி வரை சிறைக்காவல் நீட்டித்து இலங்கை நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சிறைக்காவல் முடிந்து இன்று மீனவர்கள் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணையில், மீனவர்கள் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் 19 பேரையும் நிபந்தனையுடன் விடுவிக்க இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்திய துணை தூதரக அதிகாரியிடம் மீனவர்கள் ஒப்படைக்கப்பட்டு ஓரிரு நாளில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.