திண்டுக்கல்லில் முன்விரோதம் காரணமாக ஒருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
திண்டுக்கல் கிழக்கு ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (29) இவர், அதே பகுதியைச் சேர்ந்த வீரபாண்டி என்பவரின் தங்கை பவானியை கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்தார். இந்நிலையில், கண்ணனுக்கும் பவானிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது.
இதனையடுத்து பவானி, தனது கணவருடன் கோபித்துக் கொண்டு தனது அண்ணன் வீரபாண்டி வீட்டுக்குச் சென்றார். இதனை அடுத்து வீரபாண்டி தனது மைத்துனரான கண்ணனிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்த கடந்த 06.06.2020 அன்று மருதாணிகுளம் முருகன் கோவிலுக்கு வந்தார். அங்கு வீரபாண்டிக்கும் கண்ணனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது கண்ணனின் தந்தை துரைசிங்கம் வீரபாண்டிய பிடித்துக் கொள்ள கண்ணன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வீரபாண்டியின் தலை, கை, கால், கழுத்து என பல இடங்களில் வெட்டிய நிலையில், படுகாயமடைந்த வீரபாண்டி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தந்தை துரைசிங்கம், மகன் கண்ணன் ஆகியோரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜமுனா, இன்று 18.04.22 பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.
அதில், தந்தை – மகன் இருவருக்கும் ஆயுள் தண்டனையும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனையடுத்து குற்றவாளிகள் இருவரும் மதுரை மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM