சென்னை:
மேகாலயா மாநிலத்தில் நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் உடல் இன்று சென்னை கொண்டு வரப்பட்டது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து விமானம் மூலம் தீனதயாளன் உடல் சென்னை வந்தடைந்த நிலையில், அதிகாரிகள் உடலை பெற்றுக்கொண்டனர். இதையடுத்து வேன் மூலம் சென்னை அண்ணா நகரில் உள்ள வீட்டிற்கு தீனதயாளனின் உடல் அனுப்பிவைக்கப்பட்டது.
இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், தீனதயாளனின் இல்லத்திற்கு நேரில் சென்று அரசு சார்பில் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே. மோகன், தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் முதன்மை செயலாளர் அபூர்வா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் இரா. ஆனந்தகுமார் மற்றும் அலுவலர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.
விஸ்வா தீனதயாளன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அவரின் குடும்பத்திற்கு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.