புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பில் குழப்பம்: ஜனாதிபதி – பிரதமருக்கு இடையில் கடும் மோதல்



புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பில் நேற்று (17) இரவு இடம்பெற்ற கலந்துரையாடல் மிகவும் காரசாரமாக இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய முகங்கள் பலரைக் கொண்ட அமைச்சரவையொன்றை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாகவும், அதற்கான யோசனையை இந்தக் கூட்டத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த யோசனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல சிரேஷ்ட அமைச்சர்கள் ஜனாதிபதியின் யோசனை நிறைவேற்றப்பட்டால் எதிர்க்கட்சியில் அமரப்போவதாக ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

புதிய நியமனங்களை வழங்குவதற்காக அண்மையில் நியமிக்கப்பட்ட நான்கு அமைச்சரவை அமைச்சர்களையும் தமது பதவிகளை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இந்த யோசனைக்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதோடு, தற்போது அமைச்சரவை அமைச்சர் பதவியில் இருந்து விலகத் தயாரில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அவ்வாறு நடந்தால் தனக்கும் தனது குழுவினருக்கும் எதிர்க்கட்சியில் அமருவதைத் தவிர வேறு வழியில்லை என ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக புதிய அமைச்சரவையை நியமிப்பதற்கான இறுதி தீர்மானங்களை எடுப்பதற்காக அழைக்கப்பட்ட கலந்துரையாடல் இறுதி முடிவு எடுக்கப்படாமல் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எப்படியிருப்பினும் முன்னாள் அமைச்சர்களான டலஸ் அழகப்பெரும, பந்துல குணவர்தன மற்றும் சரத் வீரசேகர ஆகியோர் புதிய அமைச்சரவை பதவிகளை ஏற்கப்போவதில்லை என முன்னர் தெரிவித்திருந்தனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.