மலைப்பகுதிகளில் கண்ணாடி பாட்டில்களில் மது விற்பனை: டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள், கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை வகுக்காவிட்டால், டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வனப்பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள், மதுபாட்டில்கள் குவிந்து கிடப்பது தொடர்பாக இணையத்தில் வெளியான காணொலிக் காட்சி அடிப்படையில் எடுத்த வழக்கு நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களில் மதுபானங்கள் விற்பனைச் செய்யப்படுகின்றன.

இதனை வாங்கி அருந்துவோர் கண்ணாடி பாட்டில்களை வனப்பகுதிகளில் வீசிச் செல்வதால், அவற்றை விலங்குகள் மிதிக்கும்போது காயமடைகின்றன. இதையடுத்து மூன்று மாதங்களில் அந்த விலங்குகள் இறந்து விடுகின்றன” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

“எனவே, மலைபகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்து இந்தக் கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம், வரும் ஏப்.25-ம் தேதிக்குள் மாற்று திட்டத்தை வகுக்க வேண்டும்” என நீதிபதிகள் அறிவுறுத்தினர். திட்டம் வகுக்க தவறினால் மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்தனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.