மாலை சூட்டிய மணமகன்… பளாரென அறைந்த மணமகள் – உ.பி.யில் ஒரு கலாட்டா கல்யாணம்!

உத்தரபிரதேசத்தில் இன்று நடந்த ஒரு திருமணத்தில் மணமகள் கழுத்தில் மாலை போட்ட மருமகனுக்கு பளார் அறை கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தரபிரதேச மாநிலம் ஹமீர்பூர் பகுதியில் இன்று காலை கோலாகலமாக திருமணம் ஒன்று நடைபெற்றது. மணமகன் வீட்டார், மணமகள் வீட்டார் என நூற்றுக்கணக்கானோர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டிருந்தனர். எங்கு பார்த்தாலும் பாட்டும், நடனமும் என நிகழ்ச்சி களைக்கட்டிக் கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, மணமகனும், மணமகளும் மாலை மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
image
அப்போது தன்னிடம் இருந்த மாலையை, மணமகள் கழுத்தில் மாப்பிள்ளை போட்டார். பதிலுக்கு தனது கழுத்தில் மாலை வாங்குவதற்காக சற்று குனிந்தவாறு மாப்பிள்ளை நின்றார். ஆனால், மணமகளோ மாலை போடுவதற்கு பதிலாக மாப்பிள்ளையின் கன்னத்தில் பளார் என அறைந்தார். இதனால் மாப்பிள்ளையும், அங்கு சுற்றி நின்றிருந்த நண்பர்களும் உறவினர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். எனினும், எதையும் கண்டுகொள்ளாத மணமகள் மீண்டும் இரண்டு முறை மாப்பிள்ளையை அறைந்துவிட்டு கோபத்தில் மேடையில் இருந்து இறங்கி சென்றார்.

courtesy : NBT Viral
மணமகளின் இந்த செயலால் மாப்பிள்ளை வீட்டாரும், பெண் வீட்டாரும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர். பின்னர், பெண் வீட்டார் மணமகளை சமாதானம் செய்து மீண்டும் மேடைக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து திருமணம் சுபமாக முடிந்தது. மாலை மாற்றும் நிகழ்வுக்கு முன்பாக, மாப்பிள்ளையின் நண்பர்கள் தம்பதியை சுற்றி கன்னாபின்னாவென நடனம் ஆடியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த மணமகள், மாப்பிள்ளையை அறைந்ததாக உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது. மணமகன் மணமகளிடம் அறை வாங்கிய வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.