புதுடில்லி : இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியான மேஜர் எம்.எம்.நரவானே இம்மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார். அதையடுத்து புதிய தலைமை தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.நம் ராணுவத்தின் தலைமை தளபதியாக பணியாற்றும் ஜெனரல் எம்.எம்.நரவானே, இம்மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார்.
கடந்தாண்டு டிசம்பரில் தமிழகத்தின் குன்னுாரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைகளின் தலைமை தளபதியான ஜெனரல் பிபின் ராவத் உயிரிழந்தார். அந்தப் பதவிக்கு நரவானே நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், ராணுவத்தின் 29வது தலைமை தளபதியாக, தற்போது துணைத் தளபதியாக உள்ள லெப்டினென்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். ராணுவத்தின் பொறியியல் பிரிவைச் சேர்ந்த ஒருவர் தலைமை தளபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
ராணுவத்தின் கிழக்கு பிராந்திய தளபதியாக இருந்த பாண்டே, பிப்ரவரியில் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். மஹாராஷ்டிராவின் நாக்பூரைச் சேர்ந்த இவர், 1982ல் இன்ஜினியர்ஸ் கார்ப்ஸ் என்ற ராணுவத்தின் பொறியாளர்கள் பிரிவில் சேர்ந்தார். கடந்த, 40 ஆண்டுகால பணியில் பல்வேறு இடங்களில் அவர் பணியாற்றியுள்ளார். சிறந்த சேவைக்காக, ‘பரம விஷிஸ்ட் சேவா பதக்கம், அதி விஷிஸ்ட் சேவா பதக்கம், விஷிஸ்ட் சேவா பதக்கம்’ என, பல பதக்கங்களை பெற்று உள்ளார்.
Advertisement