வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் 15 மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன்நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வட தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் 18-ம் தேதி (இன்று)தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், கரூர், ஈரோடு, புதுக்கோட்டை, தேனி, தென்காசி, விருதுநகர் ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

19-ம் தேதி (நாளை) தென் தமிழகம், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

20-ம் தேதி வட தமிழக கடலோர மாவட்டங்கள், தென் தமிழகம், நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

21-ம் தேதி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் மேகமூட்டம்

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின்ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை 82 டிகிரி முதல் 97 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும்.

17-ம் தேதி (நேற்று) புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் 10 செ.மீ., தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, கிருஷ்ணகிரி மாவட்டம் பெனுகொண்டபுரம், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.