வியட்நாம் மற்றும் கம்போடியா நாடுகளுக்கு, சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையிலான பார்லிமென்ட் குழு, இன்று அரசுமுறை பயணம் மேற்கொள்கிறது.பிற நாடுகளின் பார்லிமென்ட் நடவடிக்கைகள் குறித்து அறியவும், அந்நாடுகளுடனான உறவை மேம்படுத்தவும், லோக்சபா எம்.பி.,க் களின் குழுக்கள் அவ்வப்போது அரசு முறை பயணம் மேற்கொள்வது வழக்கம்.
கொரோனா பரவல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக இதுபோன்ற பயணங்கள் தடைபட்டன. தற்போது நிலைமை சீரடைந்துள்ளதால், பார்லி., எம்.பி.,க்கள் குழு வியட்நாம், கம்போடியா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறது. லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையிலான குழுவில், மூத்த எம்.பி.,க்கள் சி.பி.ஜோஷி உள்ளிட்ட ஆறு பேரும், லோக்சபா ‘செக்கரட்ரி ஜெனரல்’ உத்பல் குமார் சிங்கும் உள்ளனர்.
இக்குழு, இன்று முதல் வரும் 21 வரை, வியட்நாமில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளது. வியட்நாம் நேஷனல் அசெம்பிளி தலைவர் வுங்தின் ஹு, ஜனாதிபதி கியென் சுவன் பூக் ஆகியோரை சபாநாயகர் ஓம் பிர்லா சந்தித்து பேசவுள்ளார். பின், 22ம் தேதி கம்போடியா செல்கின்றனர். அங்கு, நேஷனல் அசெம்பிளி தலைவர் ஹெங் சம்ரின், நம் எம்.பி.,க்கள் குழுவுக்கு விருந்து அளிக்கிறார். ஓம் பிர்லாவுக்கு, அந்நாட்டு அரசின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட உள்ளது.
– நமது டில்லி நிருபர் –
Advertisement