Umran Malik: அச்சுறுத்தும் வேகம்; திமிறும் ஷார்ட் பால்கள்; சிதறும் யார்க்கர்கள்; யார் சாமி இவன்?

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் 20-வது ஓவரை முழுமையாக மெய்டனாக்கி மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார் உம்ரான் மாலிக். 22 வயதான உம்ரான் மாலிக்கின் இந்த சாகசத்தை கண்டு கிரிக்கெட் உலகமே ஆச்சர்யத்தில் இருக்கிறது. உண்மையில் அவர் வேகத்தைக் கண்டுதான் வியந்து நிற்கிறது. யார் இந்த உம்ரான் மாலிக்?

‘வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாக்கப்படுவதில்லை. அவர்கள் பிறக்கிறார்கள்’ என ஒரு மேற்கோள் உண்டு. சத்தியமான வார்த்தைகள். மணிக்கு 150 கி.மீ வேகத்தில் வீசும் வேகப்பந்து வீச்சாளரை யாராலும் உருவாக்கிவிட முடியாதுதான். ஆனால், வெறுமென வேகப்பந்து வீச்சாளர் என்பதற்கும் அபாயகரமான வேகப்பந்து வீச்சாளர் என்பதற்கும் இடையில் நிறைய வித்தியாசம் இருக்கிறது. தவறுகள் செய்து திருத்திக்கொள்வதற்கான போதுமான வாய்ப்புகளும், ஜாம்பவான்களின் வழிகாட்டுதலுமே ஒரு வேகப்பந்து வீச்சாளரை, சாதாரண நிலையிலிருந்து அபாயகரமான வேகப்பந்து வீச்சாளராக மாற்றுகிறது. உம்ரான் மாலிக்கை போல!

உம்ரான் மாலிக் ஜம்மு & காஷ்மீரைச் சேர்ந்தவர். டென்னிஸ் பந்திலேயே அதிகமாக கிரிக்கெட் ஆடியிருக்கிறார். ஆனால், காற்றைக் கிழித்து சீறிப்பாயும் இவரது 150 கி.மீ வேக பந்துகள் எப்போதுமே அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. 2018-ல் இர்ஃபான் பதான் ஜம்மு & காஷ்மீர் கிரிக்கெட் அணிக்கு பிளேயிங் கோச்சாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இளம் திறமைகளை ஊக்குவித்து அடுத்தக்கட்டத்திற்கு அழைத்து செல்ல ஆர்வமான இர்ஃபான், பயிற்சி முகாம்களின்போது சிறப்பாகச் செயல்படும் இளம் வீரர்களின் செயல்பாடுகளை வீடியோ எடுத்து தன்னுடன் ஆடிய முன்னாள் வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் அனுப்பி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

உம்ரான் மாலிக்கின் புயல் வேக பந்துவீச்சு இர்ஃபான் பதானை ஈர்க்கவே, அவரின் பந்துவீச்சை வீடியோ எடுத்து சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் குழுவில் இருந்த வி.வி.எஸ்.லக்ஷ்மணுக்கு அனுப்பி வைத்திருந்தார். லக்ஷ்மண் உம்ரான் மாலிக்கை ட்ரையல்ஸுக்கு அழைத்து சோதித்து பார்த்து, அணியில் நெட் பௌலராகச் சேர்த்துக்கொள்ள வழிவகை செய்தார். 2021 சீசனில் சன்ரைசர்ஸ் அணியின் நெட் பௌலராக உம்ரான் மாலிக் ஐ.பி.எல் தொடருக்குள் நுழைந்தார்.

Umran Malik

ஒரு முறை டேவிட் வார்னருக்கு வலைப்பயிற்சியின் போது உம்ரான் மாலிக் பந்துவீசியிருக்கிறார். உம்ரானின் வேகத்தை எதிர்கொள்ள முடியாமல் வார்னர் திணறவே, ஒட்டுமொத்தமாக சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் அத்தனை பேரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இந்தச் சமயத்தில்தான் தமிழக வீரர் நடராஜனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். நடராஜன் அதற்கு மேல் ஆட முடியாத சூழல் ஏற்படவே, கடந்த சீசனின் கடைசிக்கட்டத்தில் உம்ரான் மாலிக் மாற்று வீரராக சன்ரைசர்ஸ் அணிக்குள் வந்தார்.

கடந்த சீசனில் மூன்றே மூன்று போட்டிகளில் மட்டும்தான் ஆடியிருந்தார். ஆனால், அதற்குள்ளாகவே கிரிக்கெட் உலகில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டார். இவர் வீசிய 150 கி.மீ வேகத்தையும் பௌலிங் ஆக்சனையும் பார்த்துவிட்டு வக்கார் யுனிஸுடன் ஒப்பிட்டு பல முன்னாள் வீரர்களும் பாராட்டியிருந்தனர். இவர் வருங்காலத்திற்கான வீரராக இருப்பார் என்பதால், டேவிட் வார்னரையே தக்க வைக்காத சன்ரைசர்ஸ் அணி, உம்ரான் மாலிக்கை 4 கோடி கொடுத்து ரீட்டெய்ன் செய்து கொண்டது. ஒரு தரமான வேகப்பந்து வீச்சாளர் உருவாக்கப்படுவதற்கான ப்ராசஸ் இங்கே இருந்துதான் தொடங்கியது.

இந்த சீசனுக்கு முன்பாக சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக டேல் ஸ்டெய்ன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். சிலையை வடிவமைப்பதற்கான சரியான உளியும் கிடைத்துவிட்டது!

எதிர்பார்த்ததைப் போல் உம்ரான் மாலிக் முதல் சில போட்டிகளில் நன்றாக பெர்ஃபார்ம் செய்யவில்லை. வெறுமென வேகமாக மட்டுமே வீசி அடி வாங்கி கொண்டிருந்தார். வேகமாக பந்து வீசியதற்கான அந்த ஒரு லட்ச ரூபாய் அவார்டை வெல்வது மட்டுமே உம்ரானுக்கு நடந்த ஒரே பாசிட்டிவ் விஷயம். ஆனாலும், உம்ரான் ட்ராப் செய்யப்படவில்லை. ஸ்டெய்ன் உம்ரானை நம்பினார். ஸ்டெய்னை ஒட்டுமொத்த அணியும் நம்பியது.

சொல்லப்போனால், ஸ்டெய்ன் சன்ரைசர்ஸ் அணிக்கு பயிற்சியாளர் ஆன பிறகு இந்த நம்பிக்கை பிறக்கவில்லை. கடந்த சீசனில் உம்ரான் ஆடிய முதல் போட்டியில் அவர் முதல் ஓவரை வீசிய போது கமென்ட்ரி பாக்ஸில் ஸ்டெய்ன்தான் கமென்ட்ரி செய்து கொண்டிருந்தார்.

டேல் ஸ்டெய்ன்

என ஸ்டெய்ன் அப்போது வர்ணனை செய்திருந்தார். உம்ரானின் மீதான ஸ்டெய்னின் நம்பிக்கை அங்கிருந்தே துளிர்க்கத் தொடங்கியது.

சமீபத்தில் ஒருவர் ட்விட்டரில் உங்களின் இன்ஸ்பிரேசன் யார் என ஸ்டெய்னிடம் ஒரு கேள்வி கேட்க, அதற்கு உம்ரான் மாலிக்தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன் எனப் பதில் கூறியிருந்தார். அந்தளவுக்கு உம்ரானின் வேகம் ஸ்டெயினை ஈர்த்திருந்தது. இந்த குரு – சிஷ்ய பந்தமும் உம்ரான் மாலிக்கின் முன்னேற்றத்திற்குப் பெரிதாக உதவிக்கொண்டிருக்கிறது.

முதல் ஒரு சில போட்டிகளில் வெறுமென வேகத்தை மட்டும் நம்பி ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் கொடுத்துக் கொண்டிருந்த உம்ரான் மாலிக் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேறி கடந்த இரண்டு போட்டிகளாகச் சிறப்பான சம்பவங்களை நிகழ்த்தி வருகிறார். 150 கி.மீ வேகத்தில் எதிர்கொள்ளவே முடியாத ஷார்ட் பால்களையும் யார்க்கர்களையும் நேர்த்தியாக மிக்ஸ் செய்து பேட்டர்களை திணற செய்கிறார். கொல்கத்தாவிற்கு எதிராக அவர் ஸ்ரேயாஸ் ஐயரின் விக்கெட் வீழ்த்தியதுதான் அதற்கு சாட்சி. ஷார்ட் பால் போடுவதற்கான ஃபீல்டை செட் செய்துவிட்டு, அதிவேக யார்க்கரை வீசி கே.கே.ஆர் கேப்டனைக் காலி செய்திருப்பார்.

ரன்களை வாரி வழங்கிக் கொண்டிருந்த உம்ரான் அந்த போட்டியில் 4 ஓவர்களில் 27 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தியிருப்பார்.

உம்ரான் மாலிக்

பஞ்சாபுக்கு எதிரான கடைசி போட்டியில் இன்னும் வீரியமாக 4 ஓவர்களில் 28 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். அதிலும், குறிப்பாகக் கடைசி ஓவரில் ரன்னே கொடுக்காமல் 3 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். ஒரு ரன் அவுட்டோடு மொத்தமாக 4 விக்கெட்டுகள் அந்த ஓவரில் வீழ்த்தப்பட்டிருந்தன.

வெறுமென வேகப்பந்து வீச்சாளர் என்கிற தளத்திலிருந்து அபாயகரமான வேகப்பந்து வீச்சாளர் எனும் தளத்திற்கு உம்ரான் மாலிக் முன்னேறிக்கொண்டிருக்கிறார் என்பதற்கான அறிகுறிதான் இந்த கடைசி ஓவர். இதை அங்கீகரிக்கும் விதமாக ஆட்டநாயகன் விருதும் உம்ரான் மாலிக்கிற்கே வழங்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.