அரசியல் சாசனத்தை திருத்த இலங்கை பிரதமர் திட்டம்| Dinamalar

கொழும்பு:நம் அண்டை நாடான இலங்கையின் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய, அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சே திட்டமிட்டுள்ளார்.

இலங்கை, அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இதையடுத்து இலங்கை அதிபர், பிரதமர் பதவி விலக வலியுறுத்தி, அந்நாட்டு மக்கள் அதிபர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ‘இலங்கையின் நெருக்கடிக்கு, ரசாயன உர இறக்குமதிக்கு விதித்த தடை, பன்னாட்டு நிதியத்தின் உதவியை நிராகரித்தது போன்ற தவறுகள் தான் காரணம்’ என, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று முன்தினம் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, மக்கள் விருப்பத்திற்கு மாறாக செயல்படுவதால் ஏற்படும் தவறுகளுக்கு அரசு நிர்வாகத்தை பொறுப்பேற்கச் செய்யும் வகையில், அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய பிரதமர் மகிந்த ராஜபக்சே திட்டமிட்டுள்ளார்.

அரசு நிர்வாகம், நீதித் துறை, சட்டசபை ஆகியவற்றின் பங்களிப்புடன் புதிய சட்ட திருத்தம் அமைச்சரவை முன் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.பெட்ரோல் விலை மேலும் உயர்வுநேற்று, இலங்கை அரசின் ‘சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்’ நிறுவனம், 1 லிட்டர் பெட்ரோல் விலையை, 84 ரூபாய் உயர்த்தி, 338 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. ஒரே மாதத்தில் இது இரண்டாவது விலை உயர்வாகும்.

ஏற்கனவே லங்கன் இந்தியன் ஆயில் நிறுவனம் கடந்த ஆறு மாதங்களில், ஐந்து முறை பெட்ரோல், டீசல் விலையை இதே அளவிற்கு உயர்த்தியுள்ளது.தொடரும் போராட்டம்அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி, கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்துக்கு அருகே கலிமுகத்திடல் என்ற இடத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபருக்கு எதிராக, அவர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர். அந்த பகுதியில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது.

இதற்கிடையே, அதிபருக்கு எதிராக பார்லிமென்டில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலிபொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியதாக கூறி, இலங்கை அரசுக்கு எதிராக கேகாலை மாவட்டம் ரம்புக்கெனா பகுதியில் நேற்று ஏராளமானோர் போராட்டம் நடத்தினர். அப்போது, போராட்டம் நடத்தியவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதையடுத்து அங்கு வன்முறை ஏற்பட்டது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.