சென்னை:‘ஆம்வே இந்தியா’ நிறுவனத்தின் ரூ.757 கோடியே 77 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியா உட்படபல்வேறு நாடுகளில் ‘ஆம்வே இந்தியா’ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அழகு சாதனப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை இந்நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
‘மல்டி லெவல் மார்க்கெட்டிங்’:‘மல்டி லெவல் மார்க்கெட்டிங்’ என்ற முறையில், இந்நிறுவனத்தின் பொருட்களை விலை கொடுத்து வாங்கி உறுப்பினராகச் சேரும் நபர், அதன்பிறகு பலரையும் இத் திட்டத்தில் ஈடுபடுத்தி நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று வாக்குறுதி அளித்து வந்தது. லட்சக்கணக்கான மக்கள் இம்முறையில் பணத்தை செலுத்தி இணைந்தனர்.
இந்நிறுவனத்தின் மீது 1978-ம்ஆண்டு பரிசு சீட்டு மற்றும் தடைசெய்யப்பட்ட பண சுழற்சி திட்டம்சட்டத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை அடிப்படையாக வைத்துஅமலாக்கத் துறையினர், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் சட்டத்தின்கீழ் கடந்த 2012-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
1996-97-ல் ரூ.21 கோடியை பங்குகளாக முதலீடு செய்த ஆம்வே நிறுவனத்தின் பங்கு தற்போது ரூ.2,859 கோடியாக உயர்ந்துள்ளது எனவும்,குறிப்பாக, 2002-03 முதல் 2021-22வரை ரூ.27,562 கோடி லாபம் ஈட்டியுள்ளதாகவும், அதே இடைப்பட்ட காலத்தில் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள அதன் விநியோகஸ்தர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு ரூ.7,588 கோடியை கமிஷனாக வழங்கியுள்ளதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
இந்த மோசடி தொடர்பாக, சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் அடிப்படையில் ‘ஆம்வே இந்தியா’ நிறுவனத்தின் ரூ.757.77 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை தற்போது முடக்கியுள்ளதாகத் தெரிகிறது. மேலும் 36 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
‘ஆம்வே இந்தியா’ விளக்கம்: இதற்கிடையே, ‘ஆம்வே இந்தியா’ நிறுவனம் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
அமலாக்கத் துறை அதிகாரிகளின் நடவடிக்கை 2011-ம் ஆண்டு வரை பின்தேதியிட்ட விசாரணைக்கு சம்பந்தப்பட்டது. அதன் பின்னர் நாங்கள் துறையுடன் ஒத்துழைத்து வருகிறோம். 2011 முதல் அவ்வப்போது கோரப்பட்ட அனைத்து தகவல்களையும் பகிர்ந்து கொண்டுள்ளோம். நிலுவையில் உள்ள சிக்கல்களின்நியாயமான, சட்டப்பூர்வமானமற்றும் தர்க்கரீதியான முடிவை நோக்கி, தொடர்புடைய அரசாங்கஅதிகாரிகள் மற்றும் சட்ட அதி காரிகளுடன் நாங்கள் தொடர்ந்து ஒத்துழைப்போம்.
இணக்கமாக இருக்க உறுதிஇருப்பினும், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் (நேரடி விற்பனை) விதிகள், 2021 -ன் கீழ் நேரடி விற்பனையை சமீபத்தில் சேர்த்ததானது, தொழில்துறைக்கு மிகவும் தேவையான சட்டம் மற்றும் ஒழுங்குமுறைத் தெளிவைக் கொண்டு வந்துள்ளது. அதேவேளை, இந்தியாவின் அனைத்துச் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு எழுத்தாலும் எண்ணத்தாலும் தொடர்ந்து இணக்கமாக இருப்பதை ‘ஆம்வேஇந்தியா’ மீண்டும் உறுதிப்படுத்து கிறது. அதிக அளவில் நன்னடத்தை, நேர்மை, பெருநிறுவன நிர்வாகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவற்றைப் பராமரித்துவரும் ஒரு வளமான வரலாற்றை ‘ஆம்வே’கொண்டுள்ளது. இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையின் கீழ் இருப்பதால், மேற்கொண்டு கருத்து தெரிவிக்க நாங்கள் விரும்பவில்லை. இவ்வாறு ‘ஆம்வே இந்தியா’ நிறுவனம் தெரிவித்துள்ளது.