கர்நாடகத்தில் கமிஷன் விவகாரத்தின் பிதாமகன் சித்தராமையா: குமாரசாமி பாய்ச்சல்

பெங்களூரு:

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

பொய் சூரர், அரசியல் பச்சோந்தி சித்தராமையாவுக்கு சட்டசபை தேர்தலுக்கு முன்னரே ஜனதா தளம்(எஸ்) காய்ச்சல் வந்துவிட்டது. நான் ஏற்கனவே பல்வேறு கேள்விகளை கேட்டேன். அதற்கு அவர் பதில் சொல்லவே இல்லை. ஆனால் மீண்டும் எங்கள் கட்சிக்கு எதிராக அவர் பேசுகிறார். ஆபரேஷன் தாமரை பா.ஜனதாவின் பாவ குழந்தை. அந்த குழந்தைக்கு பாலூட்டியவர் யார் என்பதை சித்தராமையா கூற வேண்டும்.

இத்தகைய தவறான குழந்தைகளுக்கு பாலூட்டி வளர்த்தது சித்தராமையா. ஜனதா தளம் (எஸ்) பா.ஜனதாவின் ‘பி டீம்’ என்று அடிக்கடி கூறும் அவர், எந்த வகையான அரசியல் செய்கிறார். வெளிப்படையாக பேசும்போது பா.ஜனதா மதவாத கட்சி. தனிப்பட்ட முறையில் அவர் பா.ஜனதாவுடன் உறவாடுகிறார். சித்தராமையாவின் அரசியல் லீலைகள் ஒன்றா?-இரண்டா?.

சித்தராமையா பணம் வாங்கி கொண்டு அனுப்பியதாக அவரது பழைய நண்பர்கள் என்னிடம் கூறினர். காங்கிரஸ் மூழ்கும் கட்சி. இது அக்கட்சியின் தலைவருக்கு தெரியவில்லை. நாட்டில் ஜனநாயகம், அரசியல் சாசனம் காகப்பட வேண்டும் என்றால் காங்கிரசை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்று கூறியது யார்?. சித்தராமையா, கமிஷன் விவகாரத்தின் பிதாமகன்.

ஜனதா தளம்(எஸ்) 30 எம்.எல்.ஏ.க்கள் கட்சி அல்ல. 123 இடங்களில் வெற்றி பெற புறப்பட்டுள்ள கட்சி. ஈசுவரப்பா விவகாரத்தில் போலீஸ் அதிகாரி கணபதி பெயரை பயன்படுத்தி இருக்கிறார். கணபதிக்கு எவ்வளவு தொல்லைகள் கொடுக்கப்பட்டன. அவரது சாவுக்கு, காங்கிரஸ் அரசு காரணம் அல்லவா?. உங்களின் பொய் உங்களையே சுடும் காலம் வெகு தொலைவில் இல்லை.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.