ஆந்திராவில் குடும்பத்தினர் நிச்சயித்த வரன் பிடிக்காததால் வருங்கால கணவரின் கழுத்தை வெட்டிய பெண் கைது

அனகாபள்ளி: ஆந்திராவில் குடும்பத்தினர் நிச்சயித்த மணமகனை பிடிக்காத காரணத்தால், வருங்கால கணவரை தனியாக பேச அழைத்து, அவரின் கழுத்தை வெட்டிய பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம், அனகாபள்ளி மாவட்டம், மாடுகுல மண்டலம், காட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராமா நாயுடு (28). இவருக்கும், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த புஷ்பா (22) என்பவருக்கும் குடும்பத்தினர் திருமணம் நிச்சயம் செய்தனர். இவர்களுக்கு வரும் மே மாதம் 20-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், ஹைதராபாத்தில் பி.எச்டி படிக்கும் மணமகன் ராமாநாயுடு விடுப்பில் சொந்த கிராமத்திற்கு வந்தார்.

இதை அறிந்த மணமகள் புஷ்பா, தனது வருங்கால கணவருக்கு போன் செய்து திருமணம் நிச்சயம் ஆனதால் தனது தோழிகளுடன் இருவரும் கேக் வெட்டி கொண்டாடலாம். இதற்காக எங்களது ஊருக்கு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதற்கு சம்மதித்த ராமாநாயுடு, கடந்த திங்கட்கிழமை புஷ்பாவின் ஊருக்கு வந்தார். ஆனால், புஷ்பாவின் தோழிகள் யாரும் உடன் வரவில்லை. பின்னர் இருவரும் கோயிலுக்கு சென்றனர். அதன் பின்னர், “உனக்கு ஒரு பரிசு வாங்கி வந்துள்ளேன். ஆதலால் கண்களை மூடிக்கொள்” எனக் கூறிய புஷ்பா, தனது துப்பட்டாவால், ராமாநாயுடுவின் கண்களை கட்டிவிட்டு பேசிக்கொண்டே தான் எடுத்து வந்த கத்தியால் கழுத்தை வெட்டி உள்ளார். இதையடுத்து, ராமாநாயுடு ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து துடித்தார்.

அப்போது, “எனக்கு இந்த திருமணத்தில் இஷ்டமில்லை. எனது பெற்றோர் வலுக்கட்டாயமாக இந்த திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தனர். அதனால்தான் உன்னை கொலை செய்கிறேன்” என புஷ்பா கூறிஉள்ளார். இதற்குள் அப்பகுதியினர் கோயிலுக்குள் ஓடி வந்தனர்.

ஆனால், மலைக்கோயிலுக்கு சென்று வரும்போது படிக்கட்டில் இருவரும் விழுந்து விட்டோம் என கூறி, ராமாநாயுடுவை புஷ்பா தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வழியில் இவரது நண்பர்கள் பார்த்து விட்டு, நடந்த விஷயங்கள் குறித்து கேட்டறிந்தனர். இதில் சந்தேகம் வந்ததால், அனகாபள்ளி போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில் உண்மைகள் தெரியவந்துள்ளன.

தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் ராமாநாயுடு. இதனை தொடர்ந்து, ராமாநாயுடு கொடுத்த தகவலின் அடிப்படையில் கொலை செய்ய முயன்ற பெண் புஷ்பா கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுவும் ஒரு மனநல பிரச்சினைதான்..

கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் டாக்டர் சத்தியநாதன் கூறியதாவது: அந்த காலத்தில் மகளுக்கு திருமணம் செய்ய பெரும்பாலான பெற்றோர் மகளிடம் கேட்க மாட்டார்கள். பெற்றோர் சொல்லும் நபரை திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால், எல்லாம் மாறிவிட்டது. பெரும்பாலான பெண்கள் தன்னுடைய திருமணம் குறித்த முடிவை தாங்களாகவே எடுக்கின்றனர்.

ஆந்திர மாநிலத்தில் நடந்த சம்பவத்தை பார்க்கும் போது, பெண்ணை பெற்றோர் கட்டாயப்படுத்தியிருக்க வேண்டும். பெற்றோர் செய்தது பெரிய தவறு. அதேநேரத்தில் பெண் செய்ததையும் சரி என எடுத்துக் கொள்ளக்கூடாது. கத்தியை எடுத்து கொலை செய்யும் அளவுக்கு துணிவு இருக்கும் பெண்ணுக்கு மாற்று வழியை தேடி இருக்கலாம். பெற்றோரிடம் பேசியிருக்கலாம். என்னை கட்டாயப்படுத்தினால் நான் ஏதாவது செய்துக் கொள்வேன் என மிரட்டி இருக்கலாம். அந்த பெண் அனைத்து முயற்சிகளையும் எடுத்துவிட்டுதான் இறுதியாக கொலை செய்ய துணிந்தாரா அல்லது எந்த முயற்சியையும் எடுக்காமல் நேரடியாகவே கொலை செய்ய முடிவு செய்தாரா என்பது தெரியவில்லை. கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல், ஆத்திரத்தில் இவருடன் வாழ்வதை விட இவரை கொலை செய்துவிடலாம் என நினைத்திருக்கலாம். இதுவும் ஒரு விதமான மனநல பிரச்சினைதான். இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.