காவல்துறையில் 90 சதவீத அதிகாரிகள் ஊழல்வாதிகள் என்ற தனிநீதிபதியின் கருத்து நீக்கம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: காவல்துறையில் 90 சதவீத அதிகாரிகள் ஊழல்வாதிகளாக உள்ளதாக தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்களை நீக்கி சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தி என்பவர், நில விற்பனை தொடர்பாக நடேசன், ராஜவேலு ஆகியோர் மீது மாவட்டக் காவல்துறை குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இதனை விசாரித்த போலீஸார், தவறான புகார் என புகாரை முடித்து, நாமக்கல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்து முடித்துவைத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், தற்போது காவல்துறையில் 90 சதவீத அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளனர். வெறும் 10 சதவீத அதிகாரிகள் மட்டுமே நேர்மையானவர்களாக, திறமையானவர்களாக உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.ஊழல்வாதிகாளான அதிகாரிகளை களைய வேண்டிய நேரம் இது என தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.தனி நீதிபதியின் இந்தக் கருத்துக்களை நீக்கக்கோரி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது டிஜிபி சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து பின்னர், வழக்கின் எல்லைக்கு அப்பாற்பட்டு, இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்திருப்பது சட்டத்தின்படி ஏற்கத்தக்கதல்ல. இதுபோன்ற கருத்துக்கள் உயிரைப் பணையம் வைத்து பணியாற்றக்கூடிய காவல் துறையினர் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பிரதிவாதிகளாக இல்லாதவர்கள் பற்றிய கருத்துகளை தெரிவிக்க கூடாது. மேலும் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றங்களுக்கு வழங்கியுள்ள ஆலோசனையில் வழக்கிற்கு அப்பாற்பட்டு , கருத்துகளை தெரிவிக்க கூடாது என்று அறிவுறுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தனி நீதிபதியின் கருத்துக்களை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.